×

காற்றில் இருந்து புரோட்டீன் தயாரிக்கும் உத்தி : பின்லாந்து நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

காற்றில் இருந்து புரோட்டீன் தயாரிக்கும் உத்தியை பின்லாந்து நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது வரும் பத்தே ஆண்டுகளில் புரதச்சத்து நிறைந்த சோயா உணவுக்கு போட்டியாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

நீரில் இருந்து மின்சாரம் மூலம் பிரிக்கப்படும் ஹைட்ரஜனுடன், மண் பாக்டீரியாவை சேர்ப்பதன் மூலம் , இந்தப் புரோட்டீன் உருவாக்கப்படுகிறது. இதற்கான மின்சாரம் சூரியசக்தி அல்லது காற்றாலை மூலம் கிடைக்கும் என்றால், பசுமைக்குடில் வாயு (Greenhouse gas) உற்பத்தி எதுவும் இல்லாமல் உருவாக்கப்படும் உணவாக இது இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்தக் கனவு நனவாகும் போது, விவசாயம் தொடர்பான பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உலகிற்கு உதவக் கூடியதாக இது இருக்கும்.

மின்சாரத்துக்கான செலவின் அளவைப் பொருத்து, வரும் பத்தாண்டுகளின் இறுதிக்குள் இதன் உற்பத்தி விலை சோயா உற்பத்தி விலைக்கு இணையாக மாறிவிடும் என்று அவர்கள் கூறுகின்றனர். 2025 ஆம் ஆண்டுக்குள்ளேயே கூட இது சாத்தியமாகலாம் என்கின்றனர்.

அத்துடன், நிலக்கடலை, ஐஸ்கிரீம், பிஸ்கட்கள், பாஸ்டா, நூடுல்ஸ், சாஸ் அல்லது ரொட்டியுடன் சேர்ப்பது போன்று இது பயன்படுத்தப்படலாம். செயற்கை முறையில் மாமிசம் அல்லது மீன் இறைச்சி உருவாக்குவதற்கான அடிப்படைப் பொருளாக, திசுக்கள் வளர்வதற்கான தளமாக இதைப் பயன்படுத்தலாம் என்றும் கண்டுபிடிப்பாளர்கள் கூறுகின்றனர்.

திட்டமிட்டபடி முயற்சிகள் வெற்றிகரமாகத் தொடர்ந்தால், உலகளாவிய தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு, பல ஆண்டுகள் முன்னதாகவே புரோட்டீன் உற்பத்தியை அதிகரித்துவிட முடியும். செயற்கை முறையிலான உணவு தயாரிப்பை நோக்கிய பல ஆய்வுத் திட்டங்களில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது.

Tags : scientists ,Finland , In the air, protein, Finland, scientists, discovery
× RELATED உலகின் மகிழ்ச்சியான நாடுகளின்...