×

ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர்: விழுப்புரத்தில் களைகட்டிய ஆற்றுத்திருவிழா

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த ஆற்றுத்திருவிழாவில் மக்கள் குவிந்தனர். தண்ணீர் இல்லாமல் ஆறு வறண்டு கிடந்ததால் ஏமாற்றத்திற்கு ஆளானார்கள். தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள 6 மாதங்கள் தேவர்களுக்கு பகல்பொழுதாகவும் (உத்திராயண புண்ணியகாலம்), ஆடி முதல் மார்கழி வரை உள்ள 6 மாதங்கள் இரவாகவும்(தட்சிணாயண புண்ணியகாலம்) இருக்கும் என்பது ஐதீகம். உத்திராயண புண்ணியகாலத்தின் தொடக்க நாளான தை முதல் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதில் இருந்து 5வது நாளில் ஆற்றுத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் விழுப்புரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து உற்சவ மூர்த்திகளை ஊர்வலமாக எடுத்து வந்து தீர்த்தவாரி நடைபெறும். அப்போது சாமிகளுடன் சேர்ந்து பக்தர்களும் தீர்த்தமாடினால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும் என்பது நம்பிக்கை. அதன்படி நேற்று நடந்த ஆற்றுத்திருவிழாவில் சாமிகளுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடந்தது.

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்து, ஆற்றுத்திருவிழாவை கொண்டாடினார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் பிடாகம், கண்டரக்கோட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆற்றுத்திருவிழா சிறப்பாக நடந்தது. காலை முதலே மக்கள் குவிந்ததால் ஆற்றுத்திருவிழா களைகட்டியது. ஆற்றுத்திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் அந்தந்த பகுதியிலிருந்து பக்கத்திலுள்ள ஆறுகளுக்கு சாமிகள் தீர்த்தவாரிக்கு கொண்டு செல்லப்பட்டது. கண்டரக்கோட்டையில் நடந்த ஆற்றுத்திருவிழாவில் பூவரசன்குப்பம், கோலியனூர், மேல்பாதி உள்ளிட்ட கிராமங்களிலிருந்து சாமிகள் தீர்த்தவாரிக்கு சென்றன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் மழைநீரை சேமிக்காததால் வறட்சியாக காணப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஆங்காங்கே மணல்தோண்டி எடுக்கப்பட்டதாலும் பொதுமக்கள் சற்று அவதிக்குள்ளானார்கள். ஆறுகளில் தண்ணீர் தட்டுப்பாடு கடுமையாக இருந்தது. இதனால் தீர்த்தவாரிக்கு வந்த சாமிகளுக்கு மினிடேங்க் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில்ஈடுபட்டனர்.

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் தென்பெண்ணையாற்றில் ஆண்டுதோறும் பொங்கலையொட்டி ஆற்று திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு பொங்கலையொட்டி ஆற்று திருவிழா நடைபெற்றது. திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர், இரட்டைவிநாயகர், வீரபாண்டி பகுதியில் இருந்து பெருமாள், அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் உள்ள உற்சவமூர்த்திகளுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்பட 18 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் உற்சவர்களுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இதனையடுத்து உற்சவர்கள் மேளதாளம் முழங்க அந்தந்த கோயில்களில் இருந்து திருக்கோவிலூர் தென்பெண்ணையாற்றுக்கு கொண்டு வரப்பட்டனர். தொடர்ந்து அங்கு சாமிகளுக்கு தீர்த்தவாரி நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திருக்கோவிலூர், அரகண்டநல்லூர், வீரபாண்டி, தேவனூர், மணம்பூண்டி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டனர். திருக்கோவிலூர் டிஎஸ்பி மகேஷ் தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே பேரங்கியூர் தென்பெண்ணையாற்றில் நடைபெற்ற திருவிழாவில் ஆலங்குப்பம் அங்காளம்மன், பொய்கையரசூர் முத்துமாரியம்மன், பேரங்கியூர் சாமுண்டீஸ்வரி, கோதண்டராமசாமி, மணல்மேடு மாரியம்மன், மேல்தணியாலம்பட்டு அம்மன், கீரிமேடு அம்மன், தடுத்தாட்கொண்டூர் மாரியம்மன், பி.குச்சிபாளையம் அம்மன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சாமிகளுக்கு தீர்த்தவாரி அளிக்கப்பட்டது. திருவெண்ணெய்நல்லூர், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், மடப்பட்டு, கெடிலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 2016ம் ஆண்டு ஆற்றில் தண்ணீர் இல்லை என்றாலும் ஆற்றில் பொக்லைன் வைத்து பள்ளம் தோண்டி ஊற்று நீர் எடுத்து சாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. இந்த ஆண்டு ஊற்று நீர் கூட கிடைக்காமல் பேரங்கியூர் பெண்ணையாறு வறண்டு போய் இருந்தது. இதையடுத்து திருவிழாவின் பாரம்பரியம் குறையாமல் இருக்க விழாக்குழுவினர்கள் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கர் வண்டியை தயார் செய்தனர். சாமிகளின் வருகைக்கு தகுந்தாற்போல் அருகில் உள்ள விவசாய மோட்டார்களில் தண்ணீர் பிடித்து வந்து தீர்த்தவாரி அளிக்கப்பட்டது. புகழ்பெற்ற பரிக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மபெருமாள் கோயில் திருப்பணி நடப்பதால் இந்த ஆண்டு தீர்த்தவாரிக்கு செல்லவில்லை. விழாவுக்கு முக்கியமான தண்ணீர் இல்லாததாலும், லட்சுமி நரசிம்மர் தீர்த்தவாரிக்கு வராததாலும் பேரங்கியூர் ஆற்று திருவிழா சற்று களை இழந்து காணப்பட்டது. மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின் பேரில் விழுப்புரம் டிஎஸ்பி சங்கர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே பேரங்கியூர் தென்பெண்ணையாற்றில் நடைபெற்ற திருவிழாவில் ஆலங்குப்பம் அங்காளம்மன், பொய்கையரசூர் முத்துமாரியம்மன், பேரங்கியூர் சாமுண்டீஸ்வரி, கோதண்டராமசாமி, மணல்மேடு மாரியம்மன், மேல்தணியாலம்பட்டு அம்மன், கீரிமேடு அம்மன், தடுத்தாட்கொண்டூர் மாரியம்மன், பி.குச்சிபாளையம் அம்மன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. திருவெண்ணெய்நல்லூர், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், மடப்பட்டு, கெடிலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 2016ம் ஆண்டு ஆற்றில் தண்ணீர் இல்லை என்றாலும் ஆற்றில் பொக்லைன் வைத்து பள்ளம் தோண்டி ஊற்று நீர் எடுத்து சாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. இந்த ஆண்டு ஊற்று நீர் கூட கிடைக்காமல் பேரங்கியூர் பெண்ணையாறு வறண்டு போய் இருந்தது. இதையடுத்து திருவிழாவின் பாரம்பரியம் குறையாமல் இருக்க விழாக்குழுவினர்கள் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கர் வண்டியை தயார் செய்தனர்.

சாமிகளின் வருகைக்கு தகுந்தாற்போல் அருகில் உள்ள விவசாய மோட்டார்களில் தண்ணீர் பிடித்து வந்து தீர்த்தவாரி நடந்தது. புகழ்பெற்ற பரிக்கல் லட்சுமி நரசிம்மபெருமாள் கோயில் திருப்பணி நடப்பதால் இந்த ஆண்டு தீர்த்தவாரிக்கு செல்லவில்லை. விழாவுக்கு முக்கியமான தண்ணீர் இல்லாததாலும், லட்சுமி நரசிம்மர் தீர்த்தவாரிக்கு வராததாலும் பேரங்கியூர் ஆற்று திருவிழா சற்று களை இழந்து காணப்பட்டது. இந்த ஆண்டு தீர்த்தவாரிக்கு புதிய வரவாக வெள்ளியங்கிரி பகுதியில் இருந்து  சிவன் உருவச்சிலை எடுத்து வரப்பட்டு பக்தர்களின் தரிசனத்துக்கு  வைக்கப்பட்டிருந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.  மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின் பேரில் திண்டிவனம் டிஎஸ்பி (பொ) கனகேஸ்வரி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Tags : River Festival ,Villupuram Festival , Festival
× RELATED பொங்கல் பண்டிகையின் 5ஆம் நாளான இன்று...