சென்னை: எஸ்எஸ்ஐ வில்சன் கொலை வழக்கில் 2 தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து உதவிய உசேன் ஷெரீப் என்பவனை க்யூ பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்து முன்னணி திருவள்ளூர் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார்(48) கொலை வழக்கில் தொடர்புடைய 3 தீவிரவாதிகளுக்கு உதவிய வழக்கில், பெங்களூரை சேர்ந்த முகமது ஹனிப் கான்(29), இம்ரான் கான்(32), முகமது சையது(24) ஆகிய மூன்று பேரை கடந்த 7ம் தேதி க்யூ பிரிவு போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகள், மற்றும் 86 தோட்டக்கள், வரைப்படங்கள், குண்டு தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் ஜாமினில் வெளியே வந்த குற்றவாளிகளான சையது அலி நாவஸ்(25), அப்துல் சமீம்(25) காஜா மொய்தீன் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்ததும். தமிழகத்தில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்த பெங்களூரை தலைமையிடமாக ‘ஹல் ஹந்த்’ என்ற தீவிரவாத இயக்கத்தை தொடங்கி ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளுடன் சேர்ந்து சதிதிட்டம் தீட்டி வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதைதொடர்ந்து கைது செய்யப்பட்ட 3 தீவிரவாதிகளை க்யூ பிரிவு போலீசார் 10 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களின் காவல் இன்றுடன் முடிவடைகிறது. 10 நாட்களாக நடத்தப்பட்ட விசாரணையில், ‘ஹல் ஹந்த்’ அமைப்பின் மூலம் தமிழகம் முழுவதும் குண்டு வெடிப்பு சம்பவம் நடத்த சதி தீட்டம் தீட்டியிருந்ததும், இந்த இயக்கத்திற்கு காஜா மொய்தீன் தலைவனாக செல்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதை தொடர்ந்து கடந்த 10ம் தேதி பெங்களூர் பகுதியில் தீவிரவாதியான இஜாஸ் பாஷா(32) என்பவர் கைது செய்யப்பட்டார். எஸ்எஸ்ஐ வில்சன் கொலைக்கு திட்டம் தீட்டி காஜா மொய்தீன் கொடுத்ததும். அதை அப்துல் சமீம் மற்றும் தவுபீக் ஆகியோர் கடந்த 8ம் தேதி இரவு சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை துப்பாக்கியால் சுட்டு கொன்று நிறைவேற்றியதும் விசாரணையில் தெரியவந்தது.
அதைதொடர்ந்து கடந்த 16ம் தேதி சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்த தீவிரவாதிகளான அப்துல் சமீம், தவுபீக் ஆகியோரை பெங்களூரு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் மீது போலீசார் தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ்(உபா) வழக்கு பதிவு செய்துள்ளனர். காஜா மொய்தீன் தனது இயக்கத்திற்கு தனியாக உருவாக்கப்பட்ட செயலி மூலம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளின் தலைவர்களிடம் நேரடியாக தொடர்பில் இருந்து கொண்டு வரும் குடியரசு தினத்தன்று நாடு முழுவதும் 10 இடங்களில் குண்டு வைக்க திட்டமிட்டு இருந்தான். அந்த திட்டத்தை தமிழகத்தில் பல இடங்களில் நிைறவேற்ற இருந்ததும் தெரியவந்தது. சதித்திட்டம் தீட்டி இருந்தது கைதான தீவிரவாதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்த பிறகு அப்துல் சமீம் மற்றும் தவுபீக் ஆகியோர் தலைமறைவாக இருக்க ‘ஹல் ஹந்த்’ அமைப்பில் உறுப்பினராக உள்ள பெங்களூரை சேர்ந்த உசேன் ஷெரீப் என்பவர் அடைக்கலம் கொடுத்து அவர்கள் வெளிநாடு தப்பி செல்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து க்யூ பிரிவு போலீசார் நேற்று முன்தினம் அதிரடியாக பெங்களூரில் உசேன் ஷெரீப்பை கைது செய்தனர். இவரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் நேரடி தொடர்பு இருந்து வந்தும் விசாரணையில் தெரியவந்துள்ளது.