×

அண்ணாசாலையில் பைப்புகளை உரசி ரகளை 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது

சென்னை: பைக்கில் பிளாஸ்டிக் பைப்புகளை வைத்து கொண்டு வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சாலையில் உரசி சென்ற 2 சிறுவர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை அண்ணா சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 3 பைக்குகளில் 6 பேர், கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் பைப்புகளை சாலையில் உரசியபடி வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சென்றுள்ளனர். அப்போது, காரில் சென்ற நபர் ஒருவர் இதை தனது செல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ பதிவு வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவலறிந்த போக்குவரத்து போலீசார் வீடியோ பதிவு மற்றும் 6 வாலிபர்கள் பயணம் செய்த பைக் பதிவு எண்களை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது, திருவல்லிகேணி, புதுப்பேட்டை, அண்ணாசாலையை ேசர்ந்த நபர்களுக்கு சொந்தமான பைக்குகள் என தெரியவந்தது.

உடனே போலீசார் சம்பந்தப்பட்ட பைக் உரிமையாளர்களின் வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த விஜி (22), சீனிவாசன் (23), நவீன்குமார் (24), அண்ணாசாலையை சேர்ந்த முத்து மற்றும் 17வயதுக்கு உட்பட்ட 2 சிறுவர்கள் ஆகியோர் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் சில நாட்களுக்கு முன்பு உற்சாக மிகுதியில் கையில் பிளாஸ்டிக் பைப்பை வைத்து ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் அவர்கள் 6 பேரையும் போக்குவரத்து போலீசார் கைது செய்தனர்.

* கொளத்தூர் சத்யா நகரை சேர்ந்த பெயின்டர் பெருமாள் (70) நேற்று முன்தினம் பாடி மேம்பாலத்தில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார்.
* வளசரவாக்கம் கைக்கான்குப்பம், வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் மோகனா என்பவரின் மகன் சீனிவாசன் (17), அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தான். இச்சிறுவன், ஸ்டைலாக வளர்த்த தலை முடியை தாய் வெட்டியதால், மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.
* வழிப்பறியில் ஈடுபட முயன்றபோது, பணம் தர மறுத்ததால் கொடுங்கையூர் கண்ணதாசன் நகரை சேர்ந்த சசிகுமார் (29) என்பவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய பெரம்பூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த அப்பு (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். தப்பிய இவரது கூட்டாளியை தேடி வருகின்றனர்.
* வில்லிவாக்கம், நியூ ஆவடி சாலையில் உள்ள மாநகராட்சி இறைச்சி கூடத்தில், வியாபாரி ஆசாத் என்பவருக்கு சொந்தமான 9 ஆடுகளை திருடிய வழக்கில், ஓட்டேரியை சேர்ந்த மகிமைராஜ் (23), அம்பத்தூரை சேர்ந்த பாக்கியராஜ் (21) ஆகியோர் நேற்று ஐசிஎப் போலீசில் சரணடைந்தனர். இந்த வழக்கில் மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
* கொளத்தூர் செந்தில் நகர் 4வது தெருவை சேர்ந்த ஜெயந்தி (60) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 6 சவரன் நகை, அதே பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் (34) என்பவரது வீட்டை உடைத்து 5 சவரன் நகை, ரூ.7 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

Tags : children , 2 children, 6 persons, arrested
× RELATED 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால்...