பெரம்பூர்: வியாசர்பாடி ரவுடி கொலை வழக்கில் சிறுவன் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடி, பெரியார்நகர், இஸ்மாயில் சாலையை சேர்ந்த ரவுடி சந்தோஷ்குமார் (23). இவர் மீது செம்பியம், வியாசர்பாடி மற்றும் எம்கேபி நகர் காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2 தினங்களுக்கு முன், இரவு தனது வீட்டின் அருகில் நண்பர்களுடன் சந்தோஷ்குமார் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 8 பேர் கும்பல் சந்தோஷ்குமாரை ஓடஓட விரட்டி சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பியது.
இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். புளியந்தோப்பு உதவி கமிஷனர் சுரேந்தர் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் கொண்ட தனிப்படையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், சந்தேகத்தின் பேரில், செம்பியம் பகுதியில் பதுங்கியிருந்த கொடுங்கையூரை சேர்ந்த ஹரிகரன் (22), வியாசர்பாடியை சேர்ந்த நவீன் என்ற நரம்பு நவீன் (21) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதில் சந்தோஷ்குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் தகராறு ஏற்பட்டபோது, சிறுவனின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதுதவிர சந்தோஷ்குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவரை சந்தோஷ்குமார் வெட்டியுள்ளார். இதன் காரணமாக சந்தோஷ்குமாரை சிறுவன் மற்றும் அவரது கூட்டாளிகள் பழிதீர்த்தனர், என தெரியவந்தது. இவர்கள் கொடுத்த தகவலின்பேரில் வியாசர்பாடியை சேர்ந்த புவனேஷ்வர் என்ற முகேஷ் (19), சஞ்சய் (20), சுரேஷ் (19), விக்னேஷ் என்ற அப்பு (19), தங்கராஜ், பெரம்பூரை சேர்ந்த கார்த்திக் என்ற பூச்சி (22) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சிறுவனை சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். மற்றவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.