அபுஜா: நைஜீரியாவில் கடற்கொள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய கப்பலில் இருந்த 19 ஊழியர்கள் விடு தலை செய்யப்பட்டனர். நைஜீரியாவின் மேற்கு கடலோரப் பகுதியில் சென்று கொண்டிருந்த எம்.டி. டியூக் என்ற வர்த்தக கப்பல் கடந்த டிசம்பர் 15ம் தேதி, கடற்கொள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்டது. அதில், இருந்த 20 இந்திய ஊழியர்களும் சிறை பிடிக்கப்பட்டனர். அவர்களை மீட்பதற்கு நைஜீரியாவில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் மத்திய வெளியுறவு அமைச்சகம் முயற்சிகள் மேற்கொண்டது. இந்நிலையில், நைஜீரிய கடற்படை உதவியுடன் நடந்த பேச்சு வார்த்தையின் விளைவாக, கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட 19 இந்தியர்கள் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டதாக அந்நாட்டு இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
அபுஜாவில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட டிவிட்டரில், `கடந்த டிசம்பர் 15ம் தேதி சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் இருந்த இந்திய ஊழியர்களை மீட்க நைஜீரிய அரசுடன் இணைந்து மத்திய அரசு எடுத்த முயற்சிகளின் பலனாக, 19 பேர் நேற்று விடுவிக்கப்பட்டனர். சிறைபிடிக்கப்பட்ட 20 பேரில் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது.