×

புயல் பாதிப்பை தடுக்கும் வகையில் டெல்டா மாவட்டங்களில் ரூ.58 கோடியில் அலுமினியம் பவர் கேபிள் பதிப்பு: தமிழக மின்வாரியம் நடவடிக்கை

சென்னை: தமிழகத்தில் வீடு மின்இணைப்புகள்-2 கோடி, வணிகம்-35 லட்சம், தொழிற்சாலைகள்-7 லட்சம், விவசாயிகள்-21 லட்சம், குடிசைகள்- 11 லட்சம் என ெமாத்தம் 2.90 கோடிக்கும் மேலான இணைப்புகள் உள்ளன. மேலும் புதிய மின்இணைப்பு கேட்டும் ஏராளமானோர், தினசரி விண்ணப்பித்து வருகின்றனர். இவ்வாறு உள்ள மின்இணைப்புகளுக்கான மின்சாரத்தை, வாரியம், கம்பங்களின் மூலமாகவே அதிக அளவில் சப்ளை செய்கிறது. இந்த கம்பங்கள் இயற்கை சீற்றங்களின் போது எளிதாக சிக்கி சேதமடைந்து விடுகின்றன. இந்த பாதிப்பானது தமிழகத்தில் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அதிமாக இருக்கிறது. இதற்கு சமீபத்தில் வீசிய புயல்களே எடுத்துக்காட்டாக அமைகிறது. வர்தா புயல் வீசிய போது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதியில், 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான மின்சாதனங்கள் சேதமடைந்தது.

இதேபோல், ஓகி புயல் வீசிய போது, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் மின்சாதனங்கள் பாதிப்படைந்தன. அப்போது ரூ.230 கோடிக்கும் அதிகமான சாதனங்கள் சேதமடைந்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து வீசிய, கஜா புயலால் நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 2,000 கோடி ரூபாய்க்கு மேலான மின்சாதங்கள் சேதமடைந்ததாக கூறப்பட்டது. இவ்வாறு அடுத்தடுத்து வீசும் புயல்களின் காரணமாக வாரியத்திற்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சீரான மின்விநியோகத்திலும் சிக்கல் ஏற்பட்டது. அப்போது நீண்ட நாட்கள் மின்சாரம் இல்லாமல் மக்கள் தவித்தனர். எனவே இதைத்தடுக்கும் வகையில்,  கம்பங்களை தவிர்த்து தரைவழியில் மின்கேபிள்களை அதிக அளவில் பதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி ஒவ்வொரு பகுதிகளாக தரைவழி மின்இணைப்புகள் கொடுப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு புயல்களின்போது அதிக பாதிப்பை சந்திக்கும் கடலோர டெல்டா பகுதிகளில் இத்தகைய கேபிள்களை ரூ.58 கோடியில் பதிக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி கூறியதாவது: தமிழகத்தில் அதிகமான இடங்களில் கம்பங்கள் மூலமாகவே மின்சாரம் கொண்டுசெல்லப்படுகிறது. இவ்வாறு கொண்டும் செல்லும்போது புயல் ஏற்பாட்டால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் மின்இழப்பும் ஏற்படுகிறது. இதை தரைவழியில் மின்சாரத்தை கொண்டுசெல்வதன் மூலம் குறைக்கமுடியும். அதன்படி அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு தரைவழி கேபிள்களை பதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்ஒருபகுதியாக அலுமினியம் பவர் கேபிளை 240 கிமீ அளவுக்கு பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கேபிளானது கடலோர டெல்டா மாவட்டங்களில் பதிக்கப்படவுள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் பில்லர்பாக்ஸ்கள் நிறுவப்படவுள்ளது. துணைமின்நிலையங்களில் இருந்து இந்த பில்லர்பாக்ஸ்களுக்கு மின்சாரம் கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து வீடுகள், தொழிற்சாலை, கடை போன்வற்றிற்கு இணைப்பு கொடுக்கப்படும். இந்த முறையில் மின்இணைப்பு கொடுப்பதால் இயற்கை சீற்றங்களின்ேபாது ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Delta Districts , Storm Impact, Delta District, Aluminum, Tamil Nadu Power Plant
× RELATED தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும்...