×

பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் சரிந்தது

சத்தியமங்கலம்: பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் கடந்த 8 நாட்களில்  ஒன்றரை அடி சரிந்தது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கருர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 3 மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இந்த அணை கடந்த ஆண்டு பெய்த பலத்த மழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியதால் பாசனப்பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கீழ்பவானி திட்ட பிரதான வாய்க்காலில் முதல் போக பாசனம் முடிந்து கடந்த ஜனவரி 9ம் தேதி முதல் 2ம் போக பாசனத்திற்கு நிலக்கடலை பயிரிட 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் விநாடிக்கு 2200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கடந்த 9ம் தேதி அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 105 அடியாக இருந்த நிலையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் மெல்ல மெல்ல சரிய துவங்கியது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 368 கன அடியாக உள்ளது.அணையின் நீர்மட்டம் 103.66 அடியாகவும், நீர் இருப்பு 31.6 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 1800 கன அடி நீரும், பவானி ஆற்றில் 500 கன அடி நீரும் என மொத்தம் 2300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த 8 நாட்களில் அணையின் நீர்மட்டம் ஒன்றரை அடி சரிந்தது.

Tags : Bawanisagar Dam , Bawanisagar Dam , water, opened, irrigation
× RELATED கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி கீழ்பவானி அணை பூங்கா மூடல்