ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்ட திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினில் தீ பிடித்ததால் நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து நேற்று மாலை 4 மணிக்கு திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. ராமேஸ்வரத்திற்கும், தங்கச்சிமடத்திற்கும் இடையில் மெய்யம்புளி என்ற இடத்தில் ரயில்வே கேட் அருகில் சென்றபோது, ரயில் இன்ஜின் பக்கப்பகுதியில் திடீரென்று தீப்பிடித்தது.
இதனைக்கண்ட ரயில் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். பின் சிலிண்டர் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது. இன்ஜினில் ஏற்பட்ட சிறு கோளாறினால் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. தீ மேலும் பரவாமல் அணைக்கப்பட்டதை தொடர்ந்து 30 நிமிடங்கள் கழித்து மீண்டும் ரயில் புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாயினர்.