புதுடெல்லி: டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக சொசைட்டியின் உறுப்பினர்கள் குழு கடந்த நவம்பரில் மாற்றி அமைக்கப்பட்டது.இக்குழுவில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூனா கார்கே, ஜெய்ராம் ரமேஷ், கரண் சிங் ஆகியோர் நீக்கப்பட்டனர். சொசைட்டி தலைவராக பிரதமர் மோடியும், துணைத் தலைவராக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் நியமிக்கப்பட்டனர். மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்நிலையில், அருங்காட்சியகத்தின் செயற்குழு கவுன்சில் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய தலைவராக பிரதமரின் முன்னாள் செயலாளர் நிருபேந்திரா மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர்கள் அருங்காட்சியகம் கட்டப்பட உள்ளதால், தேசிய அருங்காட்சியகத்தின் சொசைட்டி, செயற்குழு கவுன்சில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.