×

வேறு பெண்ணுடன் கணவனுக்கு தொடர்பு கமிஷனர் அலுவலகம் முன்பு மனைவி தீக்குளிக்க முயற்சி: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை, ஆயிரம்விளக்கு, வாலஸ் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி (29). இவருடைய கணவர் செல்வகுமார். இவர், மூர்மார்க்கெட்டில் பழைய பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இவருக்கும் வியாசர்பாடி பகுதியை சேர்ந்த கோகிலா என்ற பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கள்ளத்தொடர்பை கைவிடுமாறு பாப்பாத்தி தனது கணவர் செல்வகுமாரிடம் பலமுறை கூறியுள்ளார். ஆனாலும் அவர் விடாமல் அந்த பெண்ணிடம் தொடர்பில் இருந்து வந்துள்ளார். எவ்வளவு சொல்லியும் கணவர் கேட்காததால் மனமுடைந்த பாப்பாத்தி வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று காலை 10.30 மணியளவில் புகார் மனு அளிக்க வந்துள்ளார்.

அப்போது திடீரென்று கமிஷனர் அலுவலக 3வது நுழைவாயில் முன், தான் மறைத்து வைத்திருந்த ஒரு லிட்டர் மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டு, கணவர் வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகவும், அவர்மீது நடவடிக்கை எடுத்து கணவரை மீட்டு தர வேண்டும் என்றும் கத்திக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்து, அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து வேப்பேரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணை வேப்பேரி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதே பெண் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பும் கமிஷனர் அலுவலகம் முன்பு குடும்ப பிரச்னை காரணமாக தீக்குளிக்க முயன்றதும் தெரிய வந்தது. கமிஷனர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : commissioner ,police investigation , Other woman, husband, contact, commissioner's office, wife, trying to fire, police, investigation
× RELATED சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி...