×

குடியரசு தினத்தன்று 6 மாநிலங்களில் ஒரே நேரத்தில் குண்டுவெடிக்க திட்டம்: தீவிரவாதிகள் பகீர் வாக்குமூலம்

சென்னை: குடியரசு தினத்தன்று 6 மாநிலங்களில் ஒரே நேரத்தில் வெடிகுண்டு வெடிக்க திட்டம் தீட்டியதாக கியூ பிரிவு போலீசாரிடம் தீவிரவாதிகள் வாக்குமூலம் அளித்தாக கூறப்படுகிறது. களியக்காவிளை போலீஸ் சோதனை சாவடியில் பணியில் இருந்த எஸ்.ஐ. வில்சன் கடந்த 8ம் தேதி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம், இளங்கடையை சேர்ந்த தவுபிக் ஆகியோரை கர்நாடக மாநிலம் உடுப்பியில் கடந்த 14ம் தேதி போலீசார் கைது செய்தனர். அவர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது உபா சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க கியூ பிரிவு போலீசார் நாளை குழித்துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

இந்தநிலையில் களியக்காவிளை எஸ்ஐ சுட்டுக்கொலை வழக்கில் மூளையாக செயல்பட்டவரும், தீவிரவாத அமைப்பான அல் உம்மாவின் தலைவனுமாக இருந்த மெகபூப் பாஷா (45) என்பவரை பெங்களூரு எஸ்ஜி பாளையில் போலீசார் கைது செய்தனர். இவரது கூட்டாளிகள் முகம்மது மன்சூர், ஜபீபுல்லா, அஜ்மத்துல்லா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் ஐஎஸ் தொடர்புகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. அப்துல் சமீம், தவுபிக் ஆகியோருக்கு துப்பாக்கி சப்ளை செய்த இஜாஸ் பாஷா என்பவர் மெகபூப் பாஷாவின் சகோதரர். குண்டல்பேட்டையில் உள்ள மதரசாவில் வைத்து அப்துல் சமீம், தவுபிக் ஆகியோரின் அறிமுகம் மெகபூப் பாஷாவிற்கு கிடைத்துள்ளது. இதற்கு இஜாஸ் பாஷா உதவியுள்ளார்.

கேரளா, தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களில் மோதல்களை ஏற்படுத்த மெகபூப் பாஷாவின் எஸ்ஜி பாளையில் உள்ள வீட்டில் சதி திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது என்று கர்நாடக போலீசின் சென்ட்ரல் கிரைம் பிராஞ்ச் (சிசிபி) மற்றும் உள்துறை பாதுகாப்பு பிரிவினர் (ஐஎஸ்டி) அறிவித்துள்ளனர். 2014ல் இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொல்லப்பட்ட வழக்கில் அல் உம்மாவை சேர்ந்த முகம்மது ஹனீப்கான்(29), முகம்மது செய்யது(24), இம்ரான்கான்(32) ஆகியோரை கடந்த 7ம் தேதி தமிழக போலீசார் பெங்களூருவில் கைது செய்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக மெகபூப் பாஷா உள்ளிட்ட 17 பேருக்கு எதிராக உபா சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டிருந்தது.

பெங்களூருவில் கலாசி பாளையம் என்ற இடத்தில் தனியார் டிராவல் ஏஜென்சியில் டிரைவராக வேலை பார்த்து வந்தவர் மெகபூப் பாஷா. மும்பை வழித்தடத்தில் பல நாட்கள் இவர் வாகனம் ஓட்டி வந்துள்ளார். இதன் மூலம் மும்பையில் உள்ள ஆயுத வியாபாரிகளுடன் அவருக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. பன்னார்பேட்டை சாலையில் அல்-ஹண்ட் என்ற டிரஸ்ட் பெயரில் அல் உம்மா அமைப்பை செயல்படுத்தி வந்துள்ளனர். மனித வெடிகுண்டு பயிற்சிக்காக இளைஞர்களை சிரியாவில் ஐஎஸ் மையங்களுக்கு அனுப்புதலில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஆயுதங்கள் வாங்குவதற்காக வெளிநாட்டு நிதி வரவழைத்து அதனை பெற்றுக்கொள்ளவே டிரஸ்ட்டை பயன்படுத்தியுள்ளார் என்று பல தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே, மெகபூப் பாஷாவுக்கு எஸ்ஐ வில்சன் கொலையில் உள்ள தொடர்புகள் குறித்து விசாரிக்க தமிழக போலீசாரும் திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே,  பெங்களூருவில் கைதான முகம்மது  ஹனீப்கான், இம்ரான்கான், முகமது செய்யது ஆகியோரை 10 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ரகசிய இடத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் எங்களுடைய தலைவர் மெகபூப் பாஷா (30), தமிழகத்தில் காஜாமொகீதின் என்பவர் தலைமையில் அல்-ஹண்ட் என்ற அமைப்பை உருவாக்கி குடியரசு தினத்தன்று தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகராஷ்டிரா, குஜராத், டெல்லி ஆகிய 6 மாநிலங்களில் ஒரே நேரத்தில் பெரிய அளவில் வெடிகுண்டு வெடிக்க வைக்க திட்டம் தீட்டி 17 பேர் கொண்ட ஒரு குழுவை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளனர். மேலும் மெகபூப் பாஷா, காஜாமொய்தீன் ஆகிய இருவரும் நேபாள தலைநகரம் காட்மண்ட்டில் வெடிகுண்டு எப்படி வெடிக்க வைக்க வேண்டும், அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பயிற்சி பெற்றுள்ளதாகவும் அங்கிருந்து வரும் போது வெடிகுண்டு, துப்பாக்கி போன்றவற்றை கொண்டு வந்ததாகவும் கியூ பிரிவு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தாக கூறப்படுகிறது.

* மேலும் 2 பேரை பிடிக்க நடவடிக்கை
எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் நேரடியாக தொடர்புடைய மேலும் 2 பேரை கைது செய்ய குமரி மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக கியூ பிரிவு போலீசார் திருவனந்தபுரம் பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : states ,militants ,Pakistani ,Republic Day , Republic Day, 6 states, bombing plan, extremists, confession
× RELATED அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்து விபத்து