×

ஆடல்-பாடல் கலைநிகழ்ச்சியில் இரட்டை அர்த்த பாடல்கள் இடம் பெற்றால் நடவடிக்கை: போலீசாருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ஆடல்பாடல் கலைநிகழ்ச்சியில் இரட்டை அர்த்த பாடல்கள் இடம் பெற்றால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே புரத்தார்குடியைச் சேர்ந்த மாதளைமுத்து, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எங்கள் ஊரில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டு ேதாறும் ஜனவரி மாதம் நடக்கும். இந்த ஆண்டிற்கான திருவிழாவை முன்னிட்டு ஜன.20ம் தேதி ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடக்க வுள்ளது. இதற்காக அனுமதியும், போலீஸ் பாதுகாப்பும் கேட்டு வையம்பட்டி போலீசில் மனு அளித்தோம். இதுவரை வழங்கப்படவில்லை. எனவே, திருவிழாவிற்கும், ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்கும் அனுமதியும், உரிய போலீஸ் பாதுகாப்பும் வழங்குமாறு வையம்பட்டி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் குறிப்பிடும் ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி வழங்க வேண்டும். போலீசார் குறிப்பிடும் நேரத்திற்குள் நிகழ்ச்சியை முடிக்க வேண்டும். மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் சிந்தனையை பாதிக்கும் வகையிலான இரட்டை அர்த்த பாடல்கள் இடம் பெறக்கூடாது. ஜாதி, மதம் மற்றும் அரசியல் கட்சிகள் குறிப்பிடும் படியான பாடல்களும் இடம் பெறக்கூடாது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் சாலைகள் மற்றும் நடைபாதைகளில் எந்தவிதமான பிளக்ஸ் பேனர்களும் வைக்கக்கூடாது. ஜாதி மற்றும் மதங்களிடையே பாகுபாடு காட்டும் வகையிலான எந்தவித செயல்பாடும் இருக்கக்கூடாது. ஏதாவது ஒரு நிபந்தனையை மீறும் வகையில் நிகழ்ச்சி அமைந்திருந்தாலும் போலீசார் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும், நிகழ்ச்சியை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க கூடாது. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் மது அருந்தி வரக்கூடாது. எந்தவித விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் நடந்தாலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பொறுப்பேற்க வேண்டும். நிகழ்ச்சி முழுமையாக வீடியோ பதிவு செய்து, அதற்குரிய சி.டி.யை எஸ்பியிடம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த நிபந்தனைகளை முறையான பின்பற்றி, எந்தவித பிரச்னையும் இன்றி நிகழ்ச்சி நடப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். 


Tags : concert-song concert ,event , Action , double meaning songs ,event
× RELATED நான் எம்ஜிஆர் ரசிகன், ஆனால் கலைஞரின்...