×

காணும் பொங்கலையொட்டி குவிந்த சுற்றுலா பயணிகள்; குப்பை கூளமாக காட்சியளிக்கும் மாமல்லபுரம்

சென்னை: காணும் பொங்கலையொட்டி நேற்று மாமல்லபுரத்தில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் தற்போது அந்த இடமே குப்பை கூளமாக காட்சியளிக்கிறது. இந்த குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று காணும் பொங்கல் விழா தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் கடற்கரை, பூங்காக்கள், சுற்றுலா தலங்கள், பொழுது போக்கு மையங்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தனர். மெரினா கடற்கரை, மாமல்லபுரம் பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா, தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சி ஆகிய இடங்களுக்கு காலை முதலே மக்கள் குடும்பம் குடும்பமாக குவிய தொடங்கினர்.

காணும் பொங்கலை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் கடற்கரை உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களுக்கு அதிகளவில் வந்ததால், சென்னை மெரினா கடற்கரை பகுதிகளில் 5 ஆயிரம் போலீசார், இதர பொழுது போக்கு இடங்களில் 5 ஆயிரம் போலீசார் என மொத்தம் 10 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதே போல் மாமல்லபுரம் கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் குவிந்தனர். இதனால் மாமல்லபுரம் கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

எங்கு பார்த்தாலும் மனித தலைகளே காணப்பட்டது. சென்னை புறநகர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் மற்றும் சுற்றுப்புற புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கட்டுச்சோற்றை கட்டி கொண்டு வந்து இருந்தனர். கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல், கலங்கரை விளக்கம் போன்ற இடங்களில் உள்ள சிற்பங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர். பொதுமக்களின் தற்காப்புக்காக படகுடன் கூடிய நீச்சல் படை வீரர்கள் கடற்கரையில் பணி அமர்த்தப்பட்டு இருந்தனர்.

கடற்கரையில் போலீசார் பொதுமக்களை ஒலிபெருக்கி மூலம் கடலில் குளிக்க வேண்டாம், விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவ்வப்போது எச்சரித்து கொண்டிருந்தனர். காணும் பொங்கலையொட்டி மாமல்லபுரத்திற்கு பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சிறப்பு பஸ்கள் மாமல்லபுரம் புறவழிச்சாலையில் உள்ள மாமல்லன் சிலை மற்றும் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தப்பட்டன. செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட போலீசார் மாமல்லபுரம் நகரம் முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : garbage dump ,Mamallapuram ,Pongal , Pongal, Mamallapuram, Rubbish, Plastic Waste, Tourists
× RELATED திருப்போரூர் பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ