பெங்களூரு: பெங்களூருவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், இந்து அமைப்பை சேர்ந்தவர்களை கொலை செய்யும் நோக்கத்துடனும் செயல்பட்ட எஸ்டிபிஐ அமைப்பை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலை முயற்சிக்கான சதி திட்டம் குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ் நேற்று அளித்த பேட்டி: கடந்த ஆண்டு டிசம்பர் 22ம் தேதி மாநிலம் முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாஜ சார்பில் பிரசார கூட்டங்கள் நடத்தப்பட்டன. அப்போது, கலாசிபாள்யம், ஹொச லேஅவுட், கும்பாரகுண்டி சாலையில் ஆர்எஸ்எஸ். அமைப்பை சேர்ந்த வருணை கொலை செய்யும் நோக்கத்தில் சிலர் பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக பெங்களூரு, ஆர்.டி. நகர், சாம்புரா முக்கிய சாலையை சேர்ந்த டெய்லரான இர்பான் என்ற முகமத் இர்பான் (33), ஆர்.டி. நகர் புவனேஷ்நகரை சேர்ந்த சையத் அக்பர் என்ற மெக்கானிக் அக்பர் (46), கே.ஜி. பாள்யா, கோவிந்தபுரா காந்திநகரை சேர்ந்த அக்பர் பாஷா என்ற அக்பர் (27), அமேசான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த லிங்கராஜபுரத்தை சேர்ந்த சிவில் காண்ட்ராக்டர் சையத் சித்திக் அக்பர் (30), ஆர்.டி. நகர் சாம்புரா முக்கிய சாலை எலக்ட்ரிக்் இன்ஜினியரிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சனா என்ற சானாவுல்லா சரீப் (28) மற்றும் சிவாஜி நகர், சாந்தினி சவுக் பகுதியில் உள்ள சவுண்ட் சர்வீஸ் கடையில் பணியாற்றி வந்த சாதிக் உல் அமின் என்ற சவுண்ட் சாதிக் (39) ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்கள் 6 பேரும் எஸ்டிபிஐ அமைப்பை ேசர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக விழிப்புணர்வு பிரசார பொதுக்கூட்டம் நடத்த பாஜ எம்பி. தேஜஸ்வி சூர்யா, டவுன் ஹாலுக்கு காலை 11.30 மணிக்கு வந்துள்ளார். அப்போது, இந்த 6 பேரும் அவரிடம் உங்கள் ஆதரவாளர் எனக்கூறி செல்பி எடுத்துக் கொள்ளும்போது, அவரை கொலை செய்யலாம் என திட்டமிட்டுள்ளனர். ஆனால், கூட்டம் அதிகமாக இருந்ததால் இவர்களின் சதி திட்டம் நிறைவேறாமல் போயுள்ளது. பின்னர், தேஜஸ்வி சூர்யா பிரசார கூட்டத்தில் இருந்து பகல் 12 மணிக்கு புறப்பட்டுள்ளார். இந்த இடைப்பட்ட நேரத்தில் எப்படியாவது அவரை கொலை செய்யலாம் என பல்வேறு முயற்சிகளை செய்துள்ளனர். கடந்த டிசம்பர் 22ம் தேதி குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பாஜ இளைஞர் அணி தலைவர் சக்ரவர்த்தி சூலிபெளே டவுன் ஹால் எதிரே விழிப்புணர்வு பிரசார கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். இவரை எப்படியாவது கொலை செய்தே தீரவேண்டும் என்பதற்காக சம்பவத்தன்று காலை 5.30 மணி முதலே முயற்சிகள் செய்துள்ளனர். ஆனால், இதுவும் முடியாமல் போயுள்ளது. இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
பீதி அடைய வேண்டாம்
போலீஸ் ஆணையர் பாஸ்கர்ராவ் மேலும் கூறுகையில், ‘‘கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது எஸ்டிபிஐ அமைப்பை ேசர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் வரும் 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாட உள்ளதால் தேவையான முன்னெச்சரி–்க்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. எனவே, பொதுமக்கள் யாரும் அச்சமோ, பீதியோ அடைய தேவையில்லை,’’ என்றார்.