×

கண்டமங்கலம் அருகே குழிக்குள் விழுந்த சிறுமி பத்திரமாக மீட்பு

திருபுவனை: விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே சின்னபாபுசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சரோஜினி (40). இவரது சகோதரர் புதுச்சேரி மாநிலம் அரியூரை சேர்ந்த பாஸ்கரன். பொங்கல் பண்டிகையை யொட்டி பாஸ்கரன் தனது மனைவி மற்றும் மகளுடன் சரோஜினி வீட்டிற்கு வந்துள்ளார். அவரது மகள் கோபினி (4) அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட சுமார் 7 அடி ஆழம் கொண்ட குழியில் விழுந்துவிட்டாள். இதனால் பயந்துபோன சிறுமி காப்பாற்றுங்கள் என கூச்சல் போட்டார். அவரது அலறல் சத்தம்கேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஓடிவந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கண்டமங்கலம் காவல் நிலைய அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொக்லைன் மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். குழிக்கு அருகே 10 அடி ஆழ பள்ளம் தோண்டப்பட்டு குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.


Tags : pit ,Kandamangalam Kandamangalam , Kandamangalam, the pit, the fallen girl, safe, the rescue
× RELATED மார்த்தாண்டம் லாரி பேட்டையில்...