ஊட்டி, : நீலகிரியில் கடந்த சில தினங்களாக உறைபனி பொழிவு அதிகரித்திருந்த நிலையில் ஊட்டியில் நேற்று மீண்டும் ‘0’ டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது. அவலாஞ்சி, அப்பர்பவானி மற்றும் கோரகுந்தா போன்ற பகுதிகளில் மைனஸ் டிகிரிக்கு வெப்பநிலை சென்றதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். நீலகிரியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக உறைபனி தாக்கம் மிக அதிகமாக காணப்படுகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று காலை அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 0 டிகிரி செல்சியசாகவும் பதிவாகியிருந்தது.இதனால், அவலாஞ்சி, அப்பர்பவானி மற்றும் கோரகுந்தா போன்ற பகுதிகளில் மைனஸ் 1 அல்லது 2 டிகிரி செல்சியசிற்கு சென்றிருக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரேஸ்கோர்ஸ், தலைகுந்தா, பைக்காரா, கிளன்மார்கன், சூட்டிங்மட்டம், கோத்தி போன்ற பகுதிகளில் உறைபனி கொட்டி கிடந்தது. இதனால், புல் மைதானங்கள் அனைத்தும் வெள்ளை கம்பளம் விரித்தார்போல் காட்சியளித்தது.இதனால் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும் குளிர் நிலவியது. பகல் நேரங்களில் வெயில் வாட்டினாலும், நிழல் தரும் இடங்களுக்கு சென்றால் குளிர் உள்ளது. மேலும், பனி பொழிவால் முகம், கை கால்களில் வெடிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.