×

நாட்டரசன்கோட்டையில் ஜன.21ல் செவ்வாய் பொங்கல்

சிவகங்கை: நாட்டரசன்கோட்டையில் செட்டிநாட்டு பாரம்பரியத்தை சொல்லும் செவ்வாய் பொங்கல் விழா ஜன.21ல் நடக்க உள்ளதையொட்டி  அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் கண்ணுடையநாயகி அம்மன் கோயில் உள்ளது.  இங்கு ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் முடிந்து வரும் முதல் செவ்வாய்கிழமை மாலை நகரத்தார்களால் செவ்வாய் பொங்கல் விழா விமரிசையாக  நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் வரும் ஜன.21 அன்று மாலை செவ்வாய் பொங்கல் விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக  நடந்து வருகிறது. நகரத்தார் சமூகத்தை சேர்ந்த ஆண்களுக்கு திருமண முடிந்தவுடன் அவர்கள் “ஒரு புள்ளியென” கணக்கில் எடுத்து  கொள்ளப்படுவார்கள். இவ்வாறு புள்ளிகள் எண்ணிக்கையில் அதிகமானோர் பொங்கலிடும் நிகழ்ச்சி நாட்டரசன்கோட்டையில் மட்டுமே நடப்பதால் இந்த  விழா அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் அம்மனுக்கு வேண்டுதல் வைத்து அவர்களும் தனியே வரிசையாக பொங்கல் வைப்பார்கள். இவ்வாறு  கோயிலுக்கு முன் ஆயிரக்கணக்கானோர் வரிசையாக பொங்கலிடும் காட்சியை காண வெளிமாவட்டங்களில் இருந்து மட்டுமில்லாமல் வெளிநாட்டில்  இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வார்கள். மேலும் இந்த பொங்கல் விழாவில் வரன் பார்க்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். பொங்கலிடும் வரிசை  எண் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும்.முதல் எண் பெற்ற பொங்கல் பானைக்கு சிறப்பு செய்யப்பட்டு அவர்கள் பொங்கல் வைக்க தொடங்கிய  உடன் மற்றவர்கள் பொங்கல் வைப்பார்கள். இந்த ஆண்டு நகரத்தார் சமூகம் சார்பில் மட்டும் 900க்கும் மேற்பட்டோர் பொங்கல் வைக்க உள்ளனர்.

இதுகுறித்து நகரத்தார் சிலர் கூறியதாவது, ‘வேண்டுதலின் பேரிலேயே இந்த விழா நடைபெற தொடங்கியுள்ளது. ஒரு முறை இந்த ஊரை கொடிய  நோய் தாக்கியபோது அம்மனுக்கு ஊரே சேர்ந்து ஓரிடத்தில் பொங்கல் வைப்பதாக வேண்டி கொண்டதன்பேரில் நோய் தீர்ந்ததாக கூறப்படுகிறது. அப்போதிருந்து இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக இந்த விழா நடைபெற்றுவருகிறது. பொங்கலிடுவதற்கான பல்வேறு  ஏற்பாடுகளை கடந்த சில வாரங்களாக செய்து வருகிறோம். பொங்கலிடும் நபர்களில் பெரும்பாலோனர் வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும்  வசிக்கிறார்கள். எந்த விழாவிற்கு வரமுடியாவிட்டாலும் இந்த விழாவில் பொங்கல் வைக்க அனைவரும் வந்துவிடும் வழக்கம் உள்ளது’ என்றனர்.



Tags : Nattarasankottai , Tuesday, Pongal, Nattarasankottai
× RELATED நாட்டரசன்கோட்டையில் செவ்வாய் பொங்கல் விழா