சிவகங்கை: சிவகங்கை அருகே பெண்கள் வெள்ளை சேலை கட்டி மாட்டுப்பொங்கல் வைத்து வழிபட்டனர்.சிவகங்கை அருகே வலையராதினிப்பட்டி கிராமத்தில் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வாழ்கின்றனர். மாட்டுப்பொங்கலை தெய்வ அனுமதி கிடைத்தால் மட்டுமே வைக்கும் இவர்கள் விஷ்ணு, ராமன், சிவன் ஆகிய மூன்று கடவுள்களை வழிபாடு செய்து வருகின்றனர். இதில் விஷ்ணு, ராமன் பிரிவினர் பொன்னழகி அம்மன், சிவன் பிரிவினர் பச்சநாட்சி அம்மனை வழிபடுகின்றனர்.
இந்த வழிபாட்டிற்காக சிவகங்கை அருகே திருமலை கிராமத்தில் உள்ள மலைக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு பிரிவினரும் தலா ஏழு குழிகள் தோண்டி தீர்த்தம் எடுத்து வருவர். பின்னர் கிராமத்திற்கு வெளியே இருக்கும் அவரவருக்கான மாட்டு தொழுவத்தில் பிடி மண் வைத்து விழாவை துவங்குவர். இதில் பங்கெடுக்கும் ஆண்கள் 15 நாட்களும் இரவில் வீட்டிற்கு செல்லாமல் தொழுவம் அருகிலேயே தங்குவர். பெண்கள் வீட்டில் விரதம் இருப்பர். இந்த ஆண்டு இவ்விழா கடந்த ஜன.1ம் தேதி துவங்கியது. நேற்று மாட்டுப்பொங்கலையொட்டி இரு பிரிவினரும் அவரவருக்கு பாத்தியப்பட்ட தொழுவத்தில் பொங்கல் வைத்தனர்.
தொழுவத்தில் பொங்கல் வைக்கும் முன் ஒவ்வொருவருடையை பங்காக கைப்பிடி அரிசி எடுத்து அய்யனாருக்கு பொங்கல் வைக்கப்பட்டது. இதில் விஷ்ணு, ராமன் பிரிவில் பெண்கள் வெள்ளை சேலை உடுத்தியும், ஆண்கள் சட்டை அணியாமலும், மண் பானையில் வெண் பொங்கல் வைத்தனர். சிவன் பிரிவினர் வண்ண ஆடைகள் அணிந்து பொங்கல் வைத்தனர். பொங்கல் வைத்தவுடன், காய்கறி, பயறு வகைகள் சமைத்து 21 தலைவாழை இலையில் படையல் வைத்து வழிபாடு செய்தனர். அனைத்து இலைகளிலும் உள்ள உணவை சாமியாடிகள் கைப்பிடி அளவு சாப்பிட்டவுடன், திருமணமாகாத ஆண்கள் மட்டுமே சாப்பிட்டனர். சாப்பிட்டவுடன் இவர்கள் கைகழுவும் நீரை எடுத்து சென்று இந்த ஆண்டு பிறந்த கன்றுக்குட்டிகள், ஆட்டு குட்டிகளுக்கு தெளித்து அவைகளுக்கு காதறுப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதுகுறித்து கிராமத்தினர் கூறியதாவது, ‘‘ஊரைக்காக்கும் தெய்வங்களுக்கு ஆண்டு தொடக்கத்தில் இவ்விழாவை எடுத்தால், இந்த ஆண்டு முழுவதும் தெய்வங்கள் நம்மை காக்கும் என்பது நம்பிக்கை. கடந்த காலங்களில் முயல், கவுதாரி வேட்டையாடி விழாவை தொடங்குவோம். தற்போது அவற்றை வேட்டுயாடுவதில்லை. இருப்பினும் அவைகளுக்கு படைக்கும் வகையில் காட்டுக்குள் பொங்கல் வைக்கிறோம். பொன்னழகி அம்மனுக்கு வெள்ளை உடை தான் அணிவிப்பதால், பெண்கள் வெள்ளை சேலை அணிகிறோம். இந்த விழாவை ஆண்டுதோறும் கடவுளிடம் அனுமதி வாங்கி சிறப்பாக கொண்டாடி வருகிறோம்’’ என்றனர்.