திருமங்கலம்: திருமங்கலம் அருகே முனியாண்டி கோயிலில் பொங்கலை முன்னிட்டு, 100 ஆடுகளை பலியிட்டு நடந்த அசைவ அன்னதான திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கோபாலாபுரம் முனியாண்டி சுவாமி கோயிலில் 57வது ஆண்டு பொங்கல் விழா நேற்று நடந்தது. தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்களில் முனியாண்டி விலாஸ் ஓட்டல் நடத்தும் உரிமையாளர்கள், கோபாலபுரத்தில் கூடி பொங்கல் வைத்து விழாவை சிற்பபாக கொண்டாடினர். இதனை ஒட்டி நேற்று காலை 7 மணிக்கு, கோபாலபுரம் கிராமத்தில் இருந்து நூற்றுக்கணக்கானோர் முக்கிய வீதிகளில் மேளதாளங்கள் முழங்க, பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்து முனியாண்டி சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
பகல் 1 மணியளவில் 100 ஆடுகள் வெட்டப்பட்டு அறுசுவை அசைவ அன்னதானம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து மாலை 5 மணியளவில் கிராமத்தின் பெரிய தெருவில் இருந்து நிலைமாலையுடன் கூடிய பூத்தட்டு ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தின் முன்பு சிலம்பாட்டம் ஆடியபடி கிராமத்து இளைஞர்கள் சென்றனர். வாண வெடிகள் வெடிக்க பூத்தட்டு ஊர்வலம் மாலை 6 மணியளவில் முனியாண்டி சுவாமி கோயிலை அடைந்ததுபக்தர்கள் கொண்டு வந்த அபிஷேக மற்றும் பூத்தட்டுகளை கொண்டு முனியாண்டி சுவாமிக்கு அபிஷேகத்துடன் கூடிய சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் முனியாண்டி விலாஸ் ஓட்டல் நடத்தும் உரிமையாளர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பஙகேற்றனர்.
இதுகுறித்து திருப்பூரினை சேர்ந்த முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர் ராமமூர்த்தி கூறுகையில், ‘‘தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி நாடு முழுவதும் ஓட்டல் நடத்தி வரும் நாங்கள், தினசரி வரும் முதல் வருமானத்தை ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவிற்காக எடுத்து சேமித்து வைப்பது வழக்கம். மாட்டுப்பொங்கலன்று உறவுகள் சூழ, எங்கள் கிராமத்தில் பொங்கல் விழா கொண்டாடுவோம். துபாய், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்கள் பலரும் இந்த பொங்கல் திருவிழாவில் கலந்து கொள்வோம். உறவுகளில் பெண், மாப்பிள்ளை பார்க்கும் படலமும் நடைபெறும்’’ என்றார்.