புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முதல்வர் நாராயணசாமி, அளித்த பேட்டியில், ‘தனவேலு எம்எல்ஏ, நானும், என்னுடைய மகனும் நில அபகரிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அதற்கான ஆதாரத்தை கவர்னரிடம் கொடுத்ததாகவும் கவர்னர் மாளிகையில் இருந்து செய்திக்குறிப்பு வந்துள்ளது. இது கவர்னருக்கு அழகல்ல. ஒருவர் வந்து புகார் கொடுத்தால் அதில் உண்மை இருந்தால் அதுசம்பந்தமாக காவல்துறைக்கோ அல்லது சிபிஐக்கோ அனுப்ப வேண்டும். ஆதாரமில்லாத குற்றச்சாட்டை கவர்னர் ஒரு பத்திரிகை செய்தியாக வெளியிடுவது, அவருக்கு நிர்வாகம் தெரியவில்லை என காட்டுகிறது. நானோ, என்னுடைய மகனோ, என் குடும்பத்தை சேர்ந்த யாராவது நில அபகரிப்பில் சம்பந்தப்பட்டிருப்பதாக ஆதாரத்துடன் நிரூபித்தால் உடனே முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன். இதேபோல் கவர்னர் கிரண்பேடி, அந்த குற்றச்சாட்டை நிரூபிக்காவிடில் பொதுவாழ்க்கையில் இருந்து விலக தயாரா?’ என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.