×

காஞ்சிபுரம் அருகே தைலமர தோப்பில் பதுக்கி வைத்த 150 ஜெலட்டின் குச்சிகள் டெட்டனேட்டர் பறிமுதல்

* துப்பாக்கி, கத்திகளும் சிக்கியது
* சதி திட்டத்துக்கு முன்னேற்பாடு?
* பிரபல ரவுடிக்கு போலீஸ் வலை

சென்னை: காஞ்சிபுரம் நகரில் ரவுடிகளின் சாம்ராஜ்யத்தை ஒடுக்க மாவட்ட போலீஸ் எஸ்பி சாமுண்டீஸ்வரி அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி, 6 தனிப்படை அமைத்து மறைந்த பிரபல தாதா ஸ்ரீதரின் ஓட்டுனர் தினேஷ், ஸ்ரீதரின் மைத்துனர் தணிகா மற்றும் தியாகு ஆகியோரின் கூட்டாளிகளான பிரபல ரவுடிகள் 56 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள நாட்டு வெடிகுண்டு வீசுவதில் கைதேர்ந்த சேக் காதர் உள்பட பலரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி துளசிராமன். இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் பல காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இவருக்கு சொந்தமான தைலமர தோப்பு மற்றும் பம்புசெட் கிளார் ஊராட்சியில் உள்ளது.

இங்கு, பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், நேற்று முன்தினம் அந்த தைலமர தோப்புக்கு சென்று சோதனை நடத்தியபோது, அங்கு நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பதற்காக 150க்கும் மேற்பட்ட ஜெலட்டின் குச்சிகள், 54 டெட்டனேட்டர்கள், பட்டா கத்தி மற்றும் ஒரு துப்பாக்கி ஆகியவை பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, சதி திட்டம் தீட்டி, அதனை முடிப்பதற்காக பயங்கர பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டதா, இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என தீவிரமாக விசாரிக்கின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள ரவுடி துளசிராமனை பிடித்தால், பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags : Detonator ,grove ,Kanchipuram. 150 ,Kanchipuram ,tetanator ,Thalaimara , Kanchipuram, Thalimara Thob, 150 gelatin sticks, tetanator, confiscation
× RELATED தூத்துக்குடியில் பணப்பட்டுவாடா செய்ததாக ஒருவர் கைது!!