சென்னை: கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சீரியல் நடிகை அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். திருவான்மியூரை சேர்ந்தவர் ஈஸ்வர். இவரது மனைவி ஜெய. இருவரும் டிவி நடிகர்கள். கடந்த ஒன்றரை ஆண்டாக தம்பதிக்குள் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இந்நிலையில் அடையாறு மகளிர் காவல் நிலையம் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் ஜெய புகார் செய்தார். அதில், ‘என் கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு உள்ளது. வரதட்சணை கேட்டு என்னை கொடுமைப்படுத்துகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வந்தனர்.
நேற்று முன்தினம் வண்டலூர் பகுதியில் குடிசைகள் எரிந்து சேதமானது. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு ஜெய காரில் திருவான்மியூருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில், கணவரிடம் இருந்து போன் அழைப்பு வந்துள்ளது. அவருடன் பேசிய சிறிது நேரத்தில், ஒரு மருந்து கடையில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டுள்ளார். பின்னர், கிழக்கு கடற்கரை சாலை வரும்போது ஜெயக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனே அவருடன் வந்த உறவினர், ஜெயயை நீலாங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஜெய வெளியிட்டுள்ள ஆடியோ வாக்குமூலம் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து நீலாங்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.