×

மு.க.ஸ்டாலின் கண்டனம் எதிரொலி தமிழக அரசின் பெரியார் விருது அறிவிப்பு: க.அர்ச்சுனனுக்கு அம்பேத்கர் விருது

சென்னை: தமிழக அரசு வழக்கமாக அறிவிக்கும் விருது பட்டியலில் பெரியார் விருது அறிவிக்கப்படவில்லை. இதற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து தமிழக அரசு பெரியார் விருதை அறிவித்துள்ளது. அதேபோன்று அம்பேத்கர் விருதும் அறிவித்துள்ளது. தமிழக அரசு கடந்த 14ம் தேதி, திருவள்ளுவர், அண்ணா, காமராஜர், பாரதியார், பாரதிதாசன், திரு.வி.க., கி.ஆ.பெ.விசுவநாதன் ஆகியோர் பெயரில் விருதுகளை அறிவித்தது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் தந்தை பெரியார் பெயரில் அறிவிக்கும் விருது அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்து திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், “தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி துறை சார்பில், ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகளில் தந்தை பெரியார் விருது யாருக்கு என்பது இந்தாண்டு விருது பட்டியலில் அறிவிக்கப்படவில்லை.

கடந்த ஆண்டு, தங்கள் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சரான பெண்மணி ஒருவருக்கு வழங்கினார்கள். இந்த ஆண்டு சொந்த கட்சியிலும் அந்த விருதுக்கு ஆள் இல்லையா அல்லது தங்கள் டெல்லி எஜமானர்களின் மனதை குளிர்விப்பதற்காக தந்தை பெரியார் விருது தவிர்க்கப்பட்டுள்ளதா, காரணம் என்ன என்பதை தமிழக மக்களுக்கு அதிமுக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். தந்தை பெரியார் விருது திட்டமிட்டு தவிர்க்கப்பட்டிருப்பதற்கு, கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறி இருந்தார்.மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்ட இரண்டு மணி நேரத்தில் 2019ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையில் கூறி இருப்பதாவது: சமூக நீதிக்காக பாடுபட்டவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது’ 1995ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2019ம் ஆண்டுக்கான பெரியார் விருது, செஞ்சி ந.ராமச்சந்திரனுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருது பெறும் அவருக்கு 1 லட்சம் விருது தொகை மற்றும் 50 ஆயிரம் மதிப்புள்ள ஒரு சரவன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள மற்றொரு அரசாணையில், “ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்திற்காக  தொண்டு செய்யும் ஒருவருக்கு டாக்டர் அம்பேத்கர் விருது’ ஆண்டுதோறும் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. அதன்படி, 2019ம் ஆண்டிற்காக டாக்டர் அம்பேத்கர் விருது முனைவர் க.அர்ச்சுனனுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருது பெறும் அவருக்கு ₹1 லட்சம் பரிசுத்தொகை மற்றும் 50 ஆயிரம் மதிப்புள்ள பொற்கிழியும் வழங்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Mathrubhumi - Stalin ,MK Stalin ,announcement ,Periyar ,government ,Tamilnadu , MK Stalin, condemnation echo, Tamilnadu government, Periyar award, announcement
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...