×

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிச்சென்றால் ஒரு நஷ்டமும் இல்லை: காட்பாடியில் துரைமுருகன் பேட்டி

வேலூர்: கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிச்சென்றால் எங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறினார். பொங்கல் பண்டிகையையொட்டி திமுக சார்பில் மக்கள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சி வேலூர் மாவட்டம் காட்பாடியில் நேற்று முன்தினம்  நடந்தது. திமுக பொருளாளர் துரைமுருகன், எம்பி கதிர்ஆனந்த், கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.காந்தி எம்எல்ஏ, வேலூர் மத்திய மாவட்ட செயலாளர்  ஏ.பி.நந்தகுமார் எம்எல்ஏ உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக ஆட்சியில் கிராமங்கள் தோறும் விளையாட்டு மைதானம் அமைப்பதாக கூறி பணத்தை அவர்களே எடுத்துக்கொள்வார்கள். இதற்காகத்தான் இத்திட்டத்தை செயல்படுத்துகின்றனர். அதேபோல ஏரிகளை தூர்வாருகிறோம் என்று கூறி, விவசாயிகளை ஏரி மண்ணை எடுத்துக்கொள்ள சொன்னார்கள். ஆனால் தூர்வாரியதாக அதற்கும் பில் போட்டு பணத்தை எடுத்துக்கொள்வார்கள். அதிமுக ஆட்சியில் தான் லஞ்ச லாவண்யம் அதிகமாக தலைவிரித்தாடுகிறது.

திமுக கூட்டணியில் ஒரு தர்மத்தை கடைபிடித்து வருகிறோம். யாரையும் நாங்களாக வெளியேற்றுவது இல்லை என்பதுதான் அது. அதற்காக அவர்களாக போனால், ‘போகாதே, போகாதே என் கணவா’ என்று ஒப்பாரி வைக்க வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை. எங்கள் அணியில் இதுவரை எத்தனையோ பேர் இருந்துள்ளனர், வெளியேறியும் உள்ளனர். அதற்காக திமுக எப்போதும் வருத்தப்பட்டதில்லை. காங்கிரஸ் விலகிச்சென்றால் எங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. அவர்களுக்கு ஓட்டு வங்கி என்று இருந்தால்தானே பாதிப்பு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : alliance ,Congress ,DMK ,Duraimurugan DMK , DMK alliance, if Congress withdraws, not a loss.
× RELATED பூந்தமல்லியில் திமுக கூட்டணி...