சென்னை: சென்னை ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக் குழுவில் சேலத்தை சேர்ந்த அதிமுக ராஜ்யசபா உறுப்பினர் சந்திரசேகரனை இணை தலைவராக நியமனம் செய்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையில் ஆயிரம் கோடி ரூபாயில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளில் மக்களின் ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்களின் ஆலோசனைகளை கேட்க வேண்டும் என்பதற்காகவும் ஸ்மார்ட் சிட்டி விதிகளின்படி நகர அளவிலான ஆலோசனைக்குழுவை அமைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதன்படி, சென்னை ஸ்மார்ட் சிட்டிக்கான ஆலோசனை மன்றத்தை அமைத்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவின்படி, ஆலோசனைக்குழு தலைவராக ஆணையரும், இணை தலைவராக சேலத்தை சேர்ந்த அதிமுக ராஜ்யசபா எம்.பி., சந்திரசேகரன், உறுப்பினராக தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் சத்யநாராயணன், துணை ஆணையர் குமரவேல் பாண்டியன், ஸ்மார்ட் சிட்டி தலைமை செயல் அலுவலர் ராஜ் சொருபல், தொழில்நுட்ப வல்லுநர் அசோதி திலிப், தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த எஸ்லி நியோசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் சென்னை ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைகுழுவில் சேலத்தை சேர்ந்த எம்.பி.,யை இணை தலைவராக சென்னை மாநகராட்சி நியமித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.