பணகுடி: பணமுடி மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடந்தன. நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள ஸ்ரீரெகுநாதபுரத்தில் ரோஸ்மியாபுரம் நதிப்பாறை உள்ளிட்ட பகுதிகளை சார்ந்த இளைஞர்கள் சார்பில் நடத்தப்பட்ட பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடந்தது. காலை முதலே பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஓட்ட பந்தயம், ஆண்களுக்கான ஓட்டப்பந்தயம், பெண்களுக்கான ஸ்பூன் வித் லெமன், சாக்கு போட்டி, மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், சைக்கிளில் சென்று மட்டை உடைத்தல், பைக்கில் மெதுவாக செல்லுதல், மியூசிக்கல் சேர், வழுக்குமரம், கயிறு இழுத்தல் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.பின்னர் மாலை 5 மணி அளவில் உடல் வலிமையை நிருபிக்கும் வகையில் இளவட்டக்கல் மற்றும் உரல் துக்குதல் போட்டி ஆரம்பமானது. இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர். அதிகமானோர் பங்குபெற வந்ததை தொடர்ந்து அவர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டு குறிப்பிட்ட நேரத்தில் யார் மிக குறைந்த நொடியில் இளவட்ட கல்லை தூக்குகிறார்களோ அவர்கள் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில் சிறுவர்களுக்கு 25 கிலோ மற்றும் 45 கிலோ எடை கொண்ட இளவட்ட கல் தூக்க அனுமதிக்கப்பட்டது.
பின்ன இளைஞர்களுக்கான 85 கிலோ எடையுள்ள இளவட்டக்கல்லை துக்கும் போட்டி நடந்தது. இதில் ரோகித்பேகாபால், செல்வன், சிவன், நாராயணன், சுடர்ராஜ், ரோஸ்ராஜா என 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர். இதில் நாராயணன் 13 நொடியில் 85 கிலோ எடைகொண்ட இளவட்டகல்லை அலேக்காக தூக்கி வீசி முதலிடம் பிடித்தார், சுடர்ராஜ் 14 நொடியில் தூக்கி இரண்டாமிடம் பிடித்தார்.இதேபோல பெண்களுக்கான உரல் துக்கும் போட்டியில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டதில் 25 கிலோ எடையுள்ள உரலை 2.5 நொடியில் தூக்கி விமலா என்பவர் முதலிடம் பெற்றார். 3.5 நொடியில் தூக்கி ராஜகுமாரி என்பவர் இரண்டாமிடம் பிடித்தார்.மேலும் முன்னதாக காலை பொங்கல் வைக்கப்பட்டு சுமார் 1500 வீடுகளுக்கு பொங்கல், பனங்கிழங்கு மற்றும் இனிப்பு பலகாரங்கள் வழங்கப்பட்டன.