கும்மிடிப்பூண்டி: சென்னையில் இருந்து 4 பேர் காரில் ஆந்திர மாநிலத்துக்கு சென்று கொண்டிருந்தனர். இவர்களின் கார் இன்று அதிகாலை 3 மணியளவில் புதுகும்மிடிப்பூண்டி அருகே பைபாஸ் சாலையின் நடுவே கிடப்பில் உள்ள மேம்பால சுவரில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் காருக்குள் இருந்த 2 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் இருவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் போலீசார், படுகாயம் அடைந்த இருவரை மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரின் சடலங்களை கைப்பற்றி, பொன்னேரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தில் சிக்கியவர்கள் குறித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் 4 பேரும் சென்னை அயனாவரத்தை பகுதியை சேர்ந்த யுகேஷ்குமார் (29), ரெட்டேரி பீபின் (29), கொளத்தூரை சேர்ந்த யுவராஜ் (29), சித்திக் (31) எனத் தெரியவந்தது. இதில், விபத்தில் யுகேஷ்குமார், பீபின் ஆகிய இருவரும் பலியாகிவிட்டனர். யுவராஜ், சித்திக் ஆகியோர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.