ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகின்றது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் பனிக்கட்டிகள் குவிந்து கிடக்கின்றன. இதற்கிடையே, ஆங்காங்கே பனிச்சரிவும் ஏற்பட்டு வருகின்றது. நேற்று முன்தினம் இரவு காஷ்மீரின் நவ்காமின் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே 7 எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இரவு சுமார் 8.30 மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் வீரர்கள் சிக்கிக்கொண்டனர். உடனடியாக மீட்பு பணி நடைபெற்றது. இதனையடுத்து 6 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். எனினும், ஒரு வீரர் உயிரிழந்தார். இந்நிலையில் மச்சில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 5 ராணுவ வீரர்கள் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ராணுவ மீட்பு குழுவினர் விரைந்தனர். தொடர்ந்து நடந்த மீட்பு பணியில் 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.
மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். மற்றொரு வீரர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. அவரை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள காகன்கிர் பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டதில் சுமார் 9 பேர் சிக்கிக் கொண்டனர். இவர்களில் 5 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் நடந்து சென்றுகொண்டிருந்தபோது பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த 5 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.