திருவனந்தபுரம்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. மேலும் இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல அமைப்புகள் சார்பில் ஏராளமான ரிட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணை வரும் 23ம் தேதி நடக்கிறது. இந்த நிலையில்சிஏஏ.வை ரத்து செய்யக் கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மத்திய அரசு கொண்டு வரும் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர மாநில அரசுகளுக்கு உரிமை இல்லை. ஆனால் பிரிவு 131ன்படி மத்திய அரசை எதிர்த்து மனுத் தாக்கல் செய்யலாம். இதை பயன்படுத்தி கேரளா இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது. இந்தியாவிலே சிஏஏ.வை ரத்து செய்ய கோரி மனுத் தாக்கல் செய்துள்ள முதல் மாநிலம் கேரளா என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல இந்த சட்டத்தை எதிர்த்து கேரளபேரவையில் மட்டுமே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.