சென்னை: கஞ்சா விற்பனை குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்த வாலிபருக்கு சரமாரியாக கத்திக்குத்து விழுந்தது. திருவல்லிக்கேணி, பல்லவன் சாலை, காந்தி நகரை சேர்ந்தவர் மணிமாறன் (20). இவர் தனது பகுதியில் கஞ்சா விறப்னை செய்யும் ரவுடி அஜித் குறித்து திருவல்லிக்கேணி போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில், போலீசார் கஞ்சா விற்பனை செய்த ரவுடி அஜித் ஆட்களை பிடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கஞ்சா விற்பனை குறித்து மணிமாறன் தான் போலீசுக்கு தகவல் கொடுத்தார் என்று சில போலீசார் மூலம் ரவுடி அஜித்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ரவுடி அஜித் நேற்று முன்தினம் நள்ளிரவு மணிமாறனை வீட்டின் அருகே, அவரை வழிமறித்து தகராறு செய்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ரவுடி அஜித் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிமாறனை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயமடைந்த மணிமாறன் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறர். இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ரவுடி அஜித்தை தேடி வருகின்றனர்.