×

கணக்கெடுப்பு குறித்து அதிமுக அரசு தொடர்ந்து அமைதி காத்தால் திமுக விரைவில் மாபெரும் போராட்டத்தை நடத்தும்: தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: கணக்கெடுப்பு குறித்து அதிமுக அரசு தொடர்ந்து அமைதி காத்தால் விரைவில் மாபெரும் போராட்டத்தை திமுக நடத்திடும் என்று மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய பாஜ அரசு தற்போது தேசிய மக்கள் தொகை பதிவேடு கொண்டு வருவதின் உள் நோக்கம் குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதற்குத் தான் என்ற அடிப்படை உண்மையை மறைக்கும் முயற்சியில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமாரும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ‘தேசிய குடிமக்கள் பதிவேடு கிடையாது. நாங்கள் கணக்கெடுக்கவில்லை’ என்று கூறி, தமிழக மக்களை திசை திருப்பி வருவது கவலையளிக்கிறது.
 
இந்நிலையில், தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணிக்கு தற்போது புதிய படிவம் வெளியிடப்பட்டிருக்கும் செய்திகளும், மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு கேட்கும் விவரங்கள் எல்லாம் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணிக்கு தேவையானவை என்ற விவரங்களும் பொதுவெளிக்கு வந்து விட்டன. மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடுமையாக போராடிக் கொண்டிருக்கின்றன. இவ்வளவுக்குப் பிறகும் அதிமுக அரசும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கப்படுவதற்கு ஆதரவாக இருப்பதும், தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க கண்ணை மூடிக்கொண்டு வழி விடுவதும் கடும் கண்டனத்திற்குரியது. ‘தேசிய குடிமக்கள் பதிவேடு’ தயாரிக்கும் 2003ம் ஆண்டு குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவளித்த கட்சி அதிமுக. இப்போது ஈழத் தமிழர்களையும், சிறுபான்மையின மக்களையும் மட்டுமின்றி, ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் 2019ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் ஆதரவளித்ததும் அதிமுக.

‘இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை கேட்டுள்ளோம்’ என்று இப்போது கூறும் அதிமுக அந்த நிலைக்குழு கூட்டத்தில் அதுபற்றி ஒரு முணுமுணுப்பைக் கூட காட்டவில்லை. இப்போது அந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு மக்களவையிலும், மாநிலங்களவையிலும் வாக்களித்து வெற்றி பெற வைத்தது அதிமுக நாட்டையே ரணகளமாக்கியுள்ள சட்டத் திருத்தத்திற்கு ஆதரவளித்து விட்டு, இன்றைக்கு மக்களுக்கு பாதிப்பு இல்லை, “என்.பி.ஆர், என்.சி.ஆர் பற்றி எங்களுக்கு அதிகாரபூர்வமான தகவல் ஏதும் இல்லை” என்றெல்லாம் தமிழக மக்களை ஏமாற்றி வருவதை உடனடியாக அதிமுக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணியை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.மக்களுக்கு நெருக்கடியும் துயரமுமளிக்கும் கணக்கெடுப்பு குறித்து, தொடர்ந்து அதிமுக அரசு அமைதி காத்தால், விரைவில் மாபெரும் போராட்டத்தை நாடே திரும்பிப் பார்க்கும் ஜனநாயக ரீதியிலான அறப்போராட்டத்தை இணக்கமான கருத்துடைய கட்சிகள் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் திமுக நடத்திடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : government ,silent protest ,AIADMK ,MK Stalin ,protest ,Tamil Nadu ,DMK , Survey, AIADMK Government, DMK, Tamil Nadu, MK Stalin, Warning
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...