×

32 குளங்கள் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வழக்கு திருத்துறைப்பூண்டி தாசில்தார் ஆய்வறிக்கை தாக்கல்: உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த வக்கீல் ஆர்.கே.அய்யப்பன்,சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், திருத்துறைப்பூண்டி தாலுகாவில் 32 குளங்கள் உள்ளன. இந்த குளங்கள் திருத்துறைப்பூண்டி வட்டாரத்திற்கு உட்பட்ட நெடும்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களுக்கு நீராதாரமாக விளங்கி வருகிறது. இந்த குளங்களை நம்பியே சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் செய்யப்படுகிறது. நிலத்தடி நீரும் பாதுகாக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த குளங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதேபோல் கள்ளக்குடி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆக்கிரமிப்பு பகுதிகளுக்கு போலியாக வரி செலுத்திய ரசீது தயாரித்து மின் இணைப்பும் பெறப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு திருவாருர் கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக பொறியாளர், திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு பலமுறை மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.ஜோயல் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதிகள், திருத்துறைப்பூண்டி தாசில்தார் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பு நிலம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருத்துறைப்பூண்டி தாசில்தார் ராஜன்பாபு குளங்கள் எல்லை மற்றும் ஆக்கிரமிப்பு விவரங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் பிடாரிகுளம், அரசங்குளம் உள்ளிட்ட 13 குளங்கள் அளவிடப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 19 குளங்கள் அருகில் நஞ்சை நிலங்களில் பயிர்கள் உள்ளதால் அறுவடைக்கு பிறகு அந்த குளங்கள் தொடர்பான எல்லையை அளவீடு செய்து  ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆய்வறிக்கையை மனுவாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 3ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Dasillardar ,Thiruvananthapuram , 32 Ponds, Disposal, Case, Thiruthuraipoondi Dasillar
× RELATED கேரளாவில் அடுக்குமாடி குடியிருப்பில்...