சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று முன்தினம் தலைமை செயலகத்தில் வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு சந்தித்து, 2.1.2020 அன்று கர்நாடக மாநிலம், தும்கூரில் நடந்த விழாவில், 2017-18ம் ஆண்டில், தமிழ்நாடு எண்ணெய் வித்துகளில் 10.382 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி அடைந்ததற்காக மத்திய அரசின் கிருஷி கர்மான் விருதுக்கு தமிழ்நாடு 5வது முறையாக தேர்வு செய்யப்பட்டு, பிரதமரால் வழங்கப்பட்ட கிருஷி கர்மான் விருதை காண்பித்து வாழ்த்து பெற்றார். விருதுடன், 2 கோடி ரூபாய் ரொக்க பரிசும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
விழாவில் நிலக்கடலை மற்றும் எள்எண்ணெய் வித்துகளை சாகுபடி செய்யும் விவசாயிகளான கடலூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாப்பாத்தி ஆகியோர் அதிக மகசூல் செய்து சாதனை படைத்ததற்காக தலா ரூ.2 லட்சம் ரொக்க பரிசும், சான்றிதழ்களும் வழங்கி கவுரவிக்கப்பட்டார்கள். நிகழ்ச்சியின்போது, அமைச்சர் ஜெயக்குமார், தலைமை செயலாளர் சண்முகம், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.