×

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 2 வயது குழந்தை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மீட்பு

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 2 வயது குழந்தை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டுள்ளார்.  குழந்தையை கடத்திய நபரை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அஜார் அலி. இவருடைய மனைவி மெர்ஜினா, இவர்களுக்கு ரசிதா என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த 12ம் தேதி இரவு தூங்கி கொண்டிருக்கும் போது குழந்தை ரசிதாவை காணவில்லை. இதனையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் அதிகாலை 2.30 மணிக்கு தனது குழந்தை ரசிதாவை காணவில்லை என புகார் கொடுத்திருந்தார். புகாரின் பேரில் அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் மும்பையிலிருந்து நாகர்கோவில் செல்லும் விரைவுரயில் திண்டுக்கல் அருகே உள்ள பாளையம் ரயில் நிலையம் வந்தபோது சந்தேகத்திற்கு இடமான நிலையில் கையில் சிறுவயது குழந்தையுடன் ஒருவன் இருப்பதாக போலீசாருக்கு பயணிகள் தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் குழந்தையை மீட்டனர். குழந்தையை கடத்திய மேற்கு வங்க மாநிலம் குல்டிகிரி பகுதியைச் சேர்ந்த தீபக் மண்டல் என்பவனையும் கைது செய்துள்ளனர்.

போலீசாரின் விசாரணையில் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்திலிருந்து காணாமல் போன குழந்தைதான் என்பது தெரியவந்தது. பின்னர் கடத்தி வரப்பட்ட குழந்தை ரசீதா மற்றும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட தீபக் மண்டல் ஆகிய இருவரையும் சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்க அனுப்பிவைத்தனர்.

Tags : Dindigul ,railway station child kidnap , child kidnap
× RELATED திண்டுக்கல்லில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்