பெங்களூரு: தென் மாநிலங்களில் தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகரித்ததை தொடர்ந்து இதுவரை 10 தீவிரவாதிகள் சிக்கியுள்ளனர். இந்து முன்னணி திருவள்ளூர் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார்(48) கொலை வழக்கில் தொடர்புடைய 3 தீவிரவாதிகளுக்கு உதவிய வழக்கில், பெங்களூரை சேர்ந்த முகமது ஹனிப் கான்(29), இம்ரான் கான்(32), முகமது சையது(24) ஆகிய மூன்று பேரை கடந்த 7ம் தேதி க்யூ பிரிவு போலீசார் துப்பாக்கி முனையில் கைது ெசய்தனர். அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகள், மற்றும் 86 தோட்டக்கள், குண்டு தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் ஜாமினில் வெளியே வந்த குற்றவாளிகளான சையது அலி நாவஸ்(25), அப்துல் சமீம்(25) காஜா மொய்தீன் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்ததும்.
கைது செய்யப்பட்ட 3 தீவிரவாதிகளை கடந்த 10ம் தேதி க்யூ பிரிவு போலீசார் 10 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சதி திட்டத்திற்கு ‘ஹல் ஹந்த்’ அமைப்பின் உறுப்பினர்களை தமிழகம் முழுவதும் குண்டு வெடிப்பு சம்பவம் நடத்த அனுப்பி வைத்திருந்ததும், 3 பேர் கைது செய்யப்பட்ட தகவலால் அவர்கள் தற்போது தலைமறைவாக இருந்து வருவதும் தெரியவந்தது. தலைமறைவாக இருந்து வந்த பெங்களூர் அடுத்த கலசபாக்கம் பகுதியில் மேலும் ஒரு தீவிரவாதியான இஜாஸ் பாஷா(46) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அடைக்கலம் கொடுத்தாக சதக்கத்துல்லா என்பவரையும் போலீசார் கைது செய்தனர். ஆனால் இஜாஷ் பாஷாவை மட்டும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க க்யூ பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், பெங்களூரு போலீசார் தீவிர சோதனை நடத்தியதில் நேற்று முன்தினம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டல்பேட்டையில் 2 பேரை கைது செய்தனர். இவர்கள் இரண்டு பேரும் தீவிரவாத அமைப்புடன் மறைமுகத்தொடர்பில் இருந்து பல்வேறு பணிவிடைகளை செய்து கொடுத்துள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையின் பேரில் நேற்று கோலார் மாவட்டம் பிரசாந்த் நகரில் தலைமறைவாக இருந்த முகமது ஜாகீத் (24), பீடி காலனி இம்ரான் (45) என்பவரை கைது செய்தனர். இவர்கள் 2 பேரும் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களுடன் மறைமுக தொடர்பு வைத்திருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுவரை மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைவரும் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த தீவிரவாதிகள் என்பது என்.ஐ.ஏ அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் வாங்கிய 5 துப்பாக்கிகள்
இஜாஸ் பாஷா நடந்த விசாரணையில் பல பகீர் தகவல்கள் வெளியானது. அதாவது இஜாஸ் பாஷா மும்பையில் இருந்து கள்ளத்தனமாக 5 துப்பாக்கிகளை வாங்கி வந்து தன் இயக்கத்தை சேர்ந்தவர்களிடம் ஐவரிடம் கொடுத்துள்ளான். அதில் கடந்த 7ம் தேதி பெங்களரூவில் கைதான 3 பேரிடம் இருந்து 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மற்ற இரண்டு துப்பாக்கிகள் தான் சப்இன்பெக்டர் வில்சனை கொன்ற சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போதும் அந்த துப்பாக்கி அவர்களிடம் தான் உள்ளது.