×

அதிமுக கவுன்சிலரை கண்டித்து போஸ்டர் ‘மக்களை ஏமாற்றிய நம்பிக்கை துரோகி கட்சி மாறியதால் ராஜினாமா செய்’

சின்னமனூர்:  திமுகவிலிருந்து அதிமுகவிற்கு மாறிய கவுன்சிலர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சின்னமனூரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தேனி மாவட்டம், சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் 10 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் திமுகவில் 6 பேரும், அதிமுகவில் 4 பேரும் இருந்தனர். திடீரென 1வது வார்டு திமுக உறுப்பினர் ஜெயந்தி சிவக்குமார் அதிமுகவில் இணைந்தார். நேற்று முன்தினம் நடந்த மறைமுக தேர்தலில் திமுக உறுப்பினர்கள் 5 பேர் மட்டும் கலந்து கொண்டனர். ஆனால், அதிமுகவினர் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதனால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் கட்சி மாறிய ஜெயந்தி சிவக்குமாரை கண்டித்து பொட்டிபுரம், திம்மிநாயக்கன்பட்டி, டி.ராமகிருஷ்ணாபுரம், சின்னபொட்டிபுரம், புதூர், எரணம்பட்டி, முத்தையன்செட்டிபட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ‘மக்களை ஏமாற்றிய நம்பிக்கை துரோகியே, பதவியை ராஜினாமா செய்’ என்பது உள்ளிட்ட வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. பொட்டிபுரம் பஞ்சாயத்து மக்கள் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களால் சின்னமனூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : AIADMK ,councilor ,party , Poster , AIADMK , Resign ,party
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...