டெல்லி: ஜிஎஸ்டி வரியை திரும்ப பெறுவதில் 931 நிறுவனங்கள் மோசடி செய்ததாக மத்திய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 931 நிறுவனங்கள் மோசடி கணக்குகளை தாக்கல் செய்து, ரிபண்டு கோரியது கண்டறியப்பட்டதாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு நடைமுறையை ஏற்படுத்தும் நோக்கத்தில் புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 2017-ம் ஆண்டின் ஜூலை மாதம் 1-ம் தேதி மத்திய மோடி அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, அனைத்துப் பொருட்கள், சேவைகளுக்கும் ஒரே விதமான வரி முறை அமலுக்கு வந்தது.
இந்த நிலையில் மோசடி செய்த 931 நிறுவனங்கள் தாக்கல் செய்துள்ள ஜிஎஸ்டி விபரங்களையும், அந்நிறுவனத்தின் கணக்கு வழக்குகளையும், முழுமையாக ஆய்வுக்குட்படுத்துமாறும் மத்திய நிதியமைச்சகத்தின் வருவாய் பிரிவு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்த வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி கணக்குத் தாக்கல் விபரங்களை ஆராயுமாறும், ஜிஎஸ்டி தகவல் பகுப்பாய்வு பிரிவுக்கும் மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.