×

நாளைமறுநாள் பொங்கல் பண்டிகை நெல்லையில் உச்சம்தொட்ட காய்கனிகள் விலை: முருங்கை கிலோ ரூ.200, கத்தரி, சின்னவெங்காயம் ரூ.125

நெல்லை: தைப்பொங்கல் திருநாள் நாளை மறுதினம் உற்சாகமாக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த ஒருவாரமாகவே தலைப்பொங்கல் கொண்டாடும் தம்பதிகளுக்கு காய்கனிகள் மற்றும் பொங்கல் பொருட்கள் வாங்குவது அதிகரித்து வருகிறது. நெல்லை மாவட்டம் முழுவதும் வழக்கமான காய்கனி சந்தைகள் தவிர பல்வேறு பொதுஇடங்களிலும் திரும்பிய பக்கமெல்லாம் பொங்கல் பொருட்கள் விற்பனை கடைகள் முளைத்துள்ளன. கரும்பு, பனைஓலை, பனங்கிழங்கு, அடுப்புகட்டி, மண்பானை, காய்கனிகள் உள்ளிட்டவைகளை விற்பனை களை கட்டியுள்ளது. இதேபோல் பாளையங்கோட்டை, டவுன் மார்க்கெட் மற்றும் உழவர்சந்தைகளிலும் காய்கனிகள் லாரிகளிலும், சிறிய வாகனங்களிலும் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. பாளையங்கோட்டை உழவர் சந்தையில் வழக்கமாக நாள் ஒன்றுக்கு சரசாரியாக 30 டன் அளவிற்கு காய்கனிகள் வந்து விற்பனையாகும். இது நேற்றுமுன்தினம் 40 டன்னாக உயர்ந்தது. நேற்று 70 டன்னாக உயர்ந்தது. இவற்றின் மொத்த விற்பனை மதிப்பு ரூ.50 லட்சமாகும்.

இன்று அதிகாலை முதல் 75 டன் அளவிற்கு இங்கு மட்டும் காய்கனிகள் வந்து குவிந்துள்ளன. அதேநேரத்தில் சில காய்கனிகள் வரத்து குறைவாக உள்ளதால் அவற்றின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றன. குறிப்பாக இந்த சந்தைக்கு முருங்கைகாய் 5 கிலோ அளவில் மட்டுமே இன்று வந்தது. இதனால் ஒருகிலோ முருங்கைகாய் நேற்று ரூ.180 ஆக விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.200ஆக உயர்ந்தது. வெளிசந்தைகளில் ரூ.225ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் கத்தரிக்காய் கிலோ ரூ.110லிருந்து ரூ.125 ஆக உயர்ந்துள்ளது. சின்னவெங்காயம் கிலோ ரூ.125 ஆக விற்கப்படுகிறது. பல்லாரி கிலோ ரூ.65 ஆக உள்ளது. மற்ற காய்கனிகள் விலை (கிலோ) விவரம் வருமாறு: வெண்டை 35, தக்காளி 28, புடலை 20, அவரை 65, பீர்க்கங்காய் 40, கொத்தவரை 24, பாகற்காய் (சிறியது) 50, பெரியது 24, மாங்காய் 130, இஞ்சி 74, பூசணிக்காய் 20, தடியங்காய் 15, சுரைக்காய் 12, கோவக்காய் 35, முள்ளங்கி 20, புதினா 35, கொத்தமல்லி 25, கருணை, சேனை, சேம்பு, சிறுகிழங்கு தலா 50, மரவள்ளி கிழங்கு 24, சீனி கிழங்கு 25, பனங்கிழங்கு (10 எண்ணம்) 60, தேங்காய் 42, உருளை 36, கோஸ் 24, பீட்ரூட் 40, சவ்சவ் 18, ரிங்பீன்ஸ் 76, பட்டர்பீன்ஸ் 170, பச்சைபட்டாணி 75, காலிபிளவர் 40 என்ற விலையில் விற்கப்படுகிறது. காய்கனிகளின் விலை உயர்ந்தாலும் பொங்கல் பண்டிகைக்காக பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

கடைகள் இருமடங்கு உயர்வுபாளையங்கோட்டை உழவர் சந்தையில் வழக்கமாக 100 கடைகள் மட்டுமே இயங்கும். கடந்த 3 தினங்களாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட உழவர்கள் இங்கு கடைகள் அமைத்துள்ளனர். இதனால் தராசு தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து 2 கடைகளுக்கு ஒரு தராசு கொடுக்கப்பட்டு சமாளிக்கப்படுகிறது. சந்தை வளாகத்தில் நடைபாதை முழுவதும் கடைகளாக காட்சியளிக்கின்றன.

கரும்பு 300, பனை ஓலை 25
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் கூட்டத்தையொட்டி விலையை அவ்வப்போது வியாபாரிகள் மாற்றுகின்றனர். நேற்றிரவு ஒரு கட்டு கரும்பு ரூ.250க்கு விற்கப்பட்டது. அதுவே இன்று காலை ரூ.300ஆக உயர்ந்தது. இதேபோல் ஒரு பனை ஓலை ரூ.20 முதல் 25 வரை விற்கப்படுகிறது.

Tags : Pongal festive, Vegetable, Price Rs.
× RELATED 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் ஸ்ரீ...