மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில் நடத்த ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை, மாநகராட்சி ஆணையர்கள் ஒருங்கிணைப்புக்கு குழுவின் உறுப்பினராக செயல்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 15-ம் தேதி பொங்கல் பண்டிகை அன்று அவனியாபுரத்தில் முதல் முறையாக உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான விழாக்குழு அமைப்பதில் பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தன.
இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்டது. அதில் குறிப்பிட்டிருப்பதாவது; அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு குழுவின் தலைவா் கணக்கு வழக்குகளை முறையாக சமா்ப்பிப்பதில்லை, யாரையும் கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக செயல்பட்டு முடிவுகளை எடுத்து வருகிறாா். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழுவில், ஆதிதிராவிட சமூகத்தினா் பங்கேற்கும் வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. இந்த நிலை தொடா்ந்தால், ஜல்லிக்கட்டு போட்டியை ஒற்றுமையுடன் நடத்துவதற்கான ஆா்வமும், பங்கெடுப்பும் குறையும்.எனவே, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனைத்து சமூகத்தினா் கூடிய விழாக் குழுவை அமைத்திட, தற்போதுள்ள விழாக் குழுவை மாற்றியமைத்திட உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதிகள், வனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளையும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விழாக்கமிட்டியினர் நடத்தவும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ஜல்லிக்கட்டு குழுவில் உள்ள கிராம கமிட்டியில் அனைத்து சமுதாய பிரதிநிதிகளும் அடங்குவார்கள். தென்மண்டல காவல்துறை தலைவர், ஊராட்சி மன்ற உதவி இயக்குனர் கண்காணிப்பின் கீழ் ஜல்லிக்கட்டு நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவனியாபுரத்தை சேர்ந்த கல்யாண சுந்தரம் உள்பட பலர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.