காரிமங்கலம்: காரிமங்கலம்- பாலக்கோடு சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். காரிமங்கலத்தில் கடைவீதி, ராமசாமி கோயில், மொரப்பூர் ரோடு, பாலக்கோடு ரோடு ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. பாலக்கோடு ரோட்டில் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், வங்கி, அரசு பள்ளி, அரசு அலுவலகங்கள் போன்றவை அமைந்துள்ளது. மேலும் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. முக்கிய சாலையான இப்பகுதியில் தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கி மற்றும் அதன் அருகே இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நிறுத்தப்படுகின்றன.
இதனால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் செல்லும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலை ஆக்கிரமிப்புகளால் குறுகலான இந்த சாலையில் விபத்துகளும் அடிக்கடி நடந்து வருகிறது. எனவே, சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை அகற்றவும், ஆக்கிரமிப்பை அகற்றவும் பேரூராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலை துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.