×

குடியாத்தம் அடுத்த அகரம்சேரியில் மாநிலத்தில் மிக பெரியதாக 85 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலை பூங்கா: விரைவில் அமைகிறது

வேலூர்: குடியாத்தம் அடுத்த அகரம்சேரியில் 85 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படுகிறது. இதுதான் தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது. வேலூர் மாவட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28ம் தேதி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் என்று 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. பின்னர், இம்மாவட்டத்தில் இருந்த நவ்லாக் அரசு தோட்டக்கலைப் பண்ணை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுவிட்டது. எனவே, வேலூர் மாவட்டத்தில் அரசு தோட்டக்கலைப் பண்ணையுடன் கூடிய பொழுதுபோக்குப் பூங்கா ஒன்றினை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக குடியாத்தம் வட்டம், அகரம்சேரி கிராமத்தில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, சுமார் 85 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையினருக்கு நில மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இப்பூங்காவின் மற்ெறாரு சிறப்பம்சம், தமிழகத்தில் தற்போது உள்ள பூங்காக்களின் பரப்பளவை விட இப்பூங்கா சுமார் 85 ஏக்கரில் அமைய உள்ள மாநிலத்தின் மிகப்பெரிய பூங்காவாகும். உதாரணமாக அரசு தாவரவியல் பூங்கா உதகையின் பரப்பளவு 55 ஏக்கர், ஊட்டி ரோஸ் கார்டன் 10 ஏக்கர், குன்னூர் சிம்ஸ் பூங்காவின் பரப்பளவு 30 ஏக்கர், ஏற்காட்டில் உள்ள பூங்காவின் பரப்பளவு 20.50 ஏக்கர் மட்டுமே. எனவே, தற்பொழுது உள்ள முக்கியமான பூங்காக்களை ஒப்பிடும்போது வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் தற்பொழுது அமைய உள்ள இந்த பூங்கா பரப்பளவில் பெரியதாகவும், அதிகமான சிறப்பினங்களை உள்ளடக்கிய உலக தரமான பூங்காவாகவும் விளங்கும். இப்பூங்கா அமைவதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி பெருவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதில் சித்த மருத்துவம், ஆயுர்வேதம் ஆகிய பாரம்பரிய மருத்துவங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அரிய வகை மரங்கள், செடிகள், மூலிகைப் பயிர்கள் அடங்கிய ஒரு பூங்கா அமைக்கப்படும்.

இதன் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு பூங்காவிற்கு வருகை தரும் பொதுமக்கள், வேளாண் பெருமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவச் செல்வங்களுக்கு மிகவும் மலிவான விலையில் விற்பனை செய்யப்படும். இந்த பொழுபோக்குப் பூங்காவில் தோட்டக்கலையில் உள்ள அனைத்து தாவரங்களும் அடங்கிய பல பயிர்ப் பூங்கா, நாட்டுத் தாவரங்கள் அடங்கிய பூங்கா, பல்லடுக்குப் பூங்கா, புல்தரை, நீண்ட நெடிய நடைபாதை, நட்சத்திரப் பூங்கா, போகன் வில்லா பூங்கா, செம்பருத்திப் பூங்கா, சிறிய நிறழ்குடில்கள், அலங்கார வளைவுகள், வெளிக் கூட்டரங்கங்கள், உள் கூட்டரங்கங்கள், தாமரைத் தடாகம் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்தப் பூங்கா திகழும். மேலும் செயற்கை நீருற்றுக்கள், குளங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள், குழந்தைகளுக்கென சிறிய புகை வண்டி, மின்கலனால் இயக்கப்படும் ஊர்திகள் முதலிய அம்சங்களுடன் இப்பூங்கா நிறுவப்பட உள்ளது.

இங்கு ஏற்கனவே உள்ள மரங்கள், புதியதாக நடவு செய்யப்படும் மரங்கள், அனைத்து தாவரங்களுக்கும் அவற்றின் பெயர்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தியில் பொறிக்கப்பட்டு பதாகைகள் அமைக்கப்படும். இப்பதாகைகளில் இத்தாவரங்களுக்கான பாரம்பரிய சிறப்பம்சங்கள், தெய்வீக தன்மைகள், மருத்துவக் குணங்கள், சுற்றுச் சூழல் சிறப்பு குணங்கள் முதலிய விவரங்கள் தெளிவாக பொறிக்கப்பட உள்ளது. அரசு தோட்டக்கலைப் பண்ணையில் மா, கொய்யா, சப்போட்டா, பலா, நாவல், எலுமிச்சை, மாதுளை, சீதா, கொடுக்காபுளி போன்ற பழப் பயிர்களும், தென்னை நாற்றுகளும், காய்கறி நாற்றுகளும் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் மானியத்திலும் குறைந்த விலையிலும் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அரசு தோட்டக்கலைப் பண்ணை மற்றும் பொழுதுபோக்குப் பூங்கா தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை மூலம் அமைத்துப் பராமரிக்கப்பட உள்ளது என்று கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அனைத்து ராசியினருக்கும் நட்சத்திர பூங்கா
அகரம் சேரியில் அமையவுள்ள தோட்டக்கலை பூங்காவில் தமிழகத்திற்கே உரித்தான மரவகைகள், சங்க இலக்கியம் மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மரங்கள், இந்து சமயக் கோயில்களுக்கு உரிதான தல விருட்சங்கள் கொண்ட ஒரு பூங்கா அமைக்கப்படும். ஒவ்வொரு ராசிக்கும் உரித்தான நட்டசத்திரங்களுக்கு உகந்த மரங்கள் மற்றும் செடிகளை உள்ளடக்கிய நட்சத்திரப் பூங்கா ஒன்றும் நிறுவப்படும். அழிவின் விளம்பில் உள்ள தாவரங்களை பாதுகாக்கும் வகையில், இந்த மரங்கள் மற்றும் செடிகளை நட்டு விதை வங்கி ஒன்று உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படும். இவ்வாறு செய்வதால் நம் நாட்டில் பாரம்பரியமான மரங்கள் மற்றும் செடிகள் பாதுகாக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் இவை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடவு செய்யப்பட்டு பல்கிப் பெருகுவதற்கான வாய்ப்பு உருவாக்கப்படும்.

நட்சத்திரப் பூங்காவை பொருத்தவரையில் ஒவ்வொருவரும் தங்களுடைய ராசி, நட்சத்திரத்திற்கு உகந்த மரம், செடிகளை பற்றி அறியும்போது ஒவ்வொருவரும் தங்களுடைய பிறந்த நாளுக்கு இந்த மரங்கள், செடிகளை நடவு செய்வதன் மூலம் நம் இந்திய நாட்டின் வனப்பரப்பு அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் சுற்றுச் சூழல் மாசு குறைந்து நாட்டு மக்கள் அனைவரும் நல்வாழ்வு வாழ்வதற்கான சூழல் ஏற்படுத்தப்படும். ஒட்டுமொத்தமாக வேலூர் மாவட்டத்தில் பல்லுயிர்ப் பூங்காவாக இப்பூங்கா அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Horticulture Park ,state ,Agramassery ,garden ,Hudiculture Park ,Gudiyatham , Settlement, horticultural park
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...