மும்பை: ‘மத்திய அரசு உத்தரவிட்டால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்படும்,’ என ராணுவ தலைமை தளபதி நரவானே தெரிவித்த கருத்துக்கு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே ஆதரவு தெரிவித்துள்ளார். ராணுவ தலைமை தளபதி நரவானே நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை பொறுத்தவரை, ஜம்மு காஷ்மீர் முழுவதும் இந்தியாவின் ஒரு பகுதி என்று பல ஆண்டுகளுக்கு முன்பே நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு உத்தரவிட்டால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ராணுவம் மீட்கும்’ என்று கூறினார்.
இந்த கருத்துக்கு மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் ராம்தாஸ் அதாவலே ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதவாலே நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘மத்திய அரசு உத்தரவிட்டால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மீது நடவடிக்கை எடுக்க ராணுவம் தயாராக இருப்பதாக ராணுவ தலைமைத் தளபதி நரவானே கூறியிருப்பதை ஆதரிக்கிறேன். நமது ராணுவ படைகளின் மீது நாடு முழு நம்பிக்கை கொண்டுள்ளது,’ என்று கூறியுள்ளார்.