×

புதுவை குடியிருப்பு பகுதியில் பயங்கரம் குண்டு வெடித்து 2 பேர் படுகாயம்

புதுச்சேரி: புதுவை முத்தியால்பேட்டையில் குடியிருப்பு பகுதியில் நேற்று காலை திடீரென வெடிகுண்டு வெடித்தது. இதில் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். புதுவை முத்தியால்பேட்டை பகுதியில் தெருவோரங்களில் குப்பை பொறுக்கி வருபவர் செல்வம் (40). வழக்கம்போல் நேற்று காலை அப்பகுதியில் குப்பைகளை பொறுக்கி அதை மூட்டையில் சேகரித்தார். பெருமாள் நாயுடு வீதி-காராமணிக்குப்பம் சாலை சந்திப்பில் பழைய இரும்புக்கடைக்கு எதிரே உள்ள குப்பைத்தொட்டியில் இருந்து குப்பைகளை பொறுக்கினார்.பின்னர் குப்பைகளை தரம் பிரித்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு அட்டை பெட்டி மூடப்பட்டிருந்தது. அதை திறந்து பார்த்தபோது அதில் நாட்டு வெடிகுண்டு இருந்தது. ஆனால் அவருக்கு வெடிகுண்டு என தெரியாததால், அதை பிரிக்க முயன்றார். அப்போது அது டமார்’ என பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் அவரது இடது கையின் ஒரு விரல் துண்டானது. மேலும், விரல்கள் சிதைந்தது. ரத்தம் சொட்ட, சொட்ட பழைய இரும்புக் கடையை நோக்கி ஓடி மயக்கம் போட்டு விழுந்தார். குண்டு வெடித்ததில் அவ்வழியாக சென்ற அன்னபூரணி (64) என்ற மூதாட்டிக்கும் காயம் ஏற்பட்டது. குண்டு சிதறல்கள் அவரது தோள்பட்டையில் தெறித்துள்ளன. குண்டு வெடித்ததால் அந்த வழியாக சென்ற மக்கள், அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

தகவலறிந்த முத்தியால்பேட்டை போலீசார் விரைந்து சென்றனர். மயங்கிக் கிடந்த தொழிலாளி செல்வம் மற்றும் அன்னபூரணியை மீட்டு புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் மோப்ப நாய் வீரா, கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். குண்டு வெடித்த குப்பை தொட்டி பகுதியில் மக்கள் செல்லாதவாறு கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தினர். வேறு வெடிகுண்டுகள் ஏதேனும் இருக்கிறதா? என குப்பைத்தொட்டி மற்றும் அங்கு கிடந்த குப்பைகளை ஆய்வு செய்தனர். சிதறிக்கிடந்த வெடிகுண்டு துகள்களையும் சேகரித்தனர். மேலும், சிகிச்சை பெறும் செல்வத்திடம் வெடிகுண்டு பார்சல் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

அட்டைப்பெட்டியில் முகவரி
குண்டு வெடித்தபோது அதன் சத்தம் ஒரு கி.மீ தூரம் வரை கேட்டுள்ளது. குண்டு இருந்த அட்டை பெட்டியில் ஒருவரது முகவரி எழுதப்பட்டுள்ளது. அந்த நபருக்கு பார்சல் வந்து, அந்த பெட்டியில் குண்டை வைத்து குப்பை தொட்டியில் போட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன்பேரில், முகவரியில் குறிப்பிட்டுள்ள நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : Terrorists ,Puthuvai ,houses , Terror bomb explodes in Puthuvai, residential area
× RELATED 133 பேர் பலியான மாஸ்கோ தாக்குதல்...