பெங்களூரு: பெங்களூருவில் பதுங்கியிருந்த, காலிஸ்தான் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்து ஆந்திர வாலிபரை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். பஞ்சாபில் இருந்து காலிஸ்தானை பிரித்து தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று சில தீவிரவாத அமைப்புகள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இத்தகைய தீவிரவாதிகளில் சிலருக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் மற்றும் சில மாநில போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. பெங்களூருவில் இந்த தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. ஏற்கனவே பாகிஸ்தான், வங்கதேசத்தை சேர்ந்த தீவிரவாத அமைப்பினரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், புதிதாக காலிஸ்தான் தீவிரவாத அமைப்பினரும் பெங்களூருவில் பதுங்கியிருப்பதாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காலிஸ்தான் தீவிரவாத அமைப்பினரின் நடவடிக்கையை இணையதளம் மற்றும் பல்வேறு கோணங்களில் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று பெங்களூருவில் பதுங்கியிருந்த இந்த அமைப்பை சேர்ந்த தீவிரவாதி ஒருவரை சம்பிகேஹள்ளி பகுதியில் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இவர் ஐதராபாத்தை சேர்ந்த ஜர்னல் சிங் சித்து என்று தெரிய வந்தது. இன்ஜினியரிங் முடித்த இவர், பெங்களூருவில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். பஞ்சாப்பில் இருந்து காலிஸ்தானை பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டுமென்ற விருப்பம் இவருக்கு அதிக நாட்களாக இருந்துள்ளது. நிகால் சிங் என்ற காலிஸ்தான் தீவிரவாத அமைப்பை சேர்ந்த வாலிபருடன் இவர் ெதாடர்பில் இருந்துள்ளார். இவரது ஆலோசனையின் பேரில் காலிஸ்தான் தனிநாடு தொடர்பான பல்வேறு போராட்டங்களிலும், வன்முறையிலும் ஈடுபட்டுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு மேகாலயாவில் நடந்த வன்முறையில் இவருக்கு தொடர்பு இருந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பஞ்சாப் போலீசார், ஜர்னல் சிங் குறித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் பாகிஸ்தானை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தது மட்டுமின்றி, காலிஸ்கான் தீவிரவாத அமைப்புடனும் நெருக்கமாக இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக பஞ்சாப் மாநில மற்றும் மேகாலயா போலீசார் அவரை கைது செய்ய முயற்சித்தனர். இதனை தெரிந்து கொண்ட ஜர்னல் சிங், பெங்களூருவில் தஞ்சமடைந்துள்ளார். இங்கு வாடகை வீட்டில் வசித்து கொண்டு, காலிஸ்தான் அமைப்பிற்கு உதவி செய்துள்ளார். இது குறித்து பஞ்சாப் மாநில போலீசார் கொடுத்த தகவலின் பேரில் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு மற்றும் காலிஸ்தான் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களை தேடும் பணியில் ஈடுபட்டபோது, ஜர்னல் சிங் சித்து கைது செய்யப்பட்டுள்ளார். இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் மேல் விசாரணைக்காக பஞ்சாப் மாநில போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தீவிரவாதிகளுக்கு புகலிடம்; மசூதி மவுலானா சிக்கினார்
கர்நாடகாவில் தீவிரவாதிகள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தமிழகம் மற்றும் டெல்லி போலீசார் பெங்களூருவில் இருதினங்களுக்கு முன் 3 தீவிரவாதிகளை அதிரடியாக கைது செய்தனர். மேலும், 2 தீவிரவாதிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில், கைது செய்துள்ள தீவிரவாதிகளிடம் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மேலும், விசாரணையின் போது தீவிரவாதிகள் தங்கியிருக்க குண்டல்பேட்டையில் மசூதியை புகலிடமாக கொடுத்தது குறித்து தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டல்பேட்டை நகருக்கு சென்றனர். அங்குள்ள மசூதியில் உள்ள மவுலானா சதக்கத்துல்லாகானிடம் விசாரணை நடத்தினர். அப்போது மவுலானா சதக்கத்துல்லா கான் தீவிரவாதிகள் மறைந்திருக்க மசூதியை புகலிடமாக அளித்தது தெரியவந்தது. மேலும் அல்உமர் அமைப்பை சேர்ந்த மெகபூப் பாஷாவும் இவர்களுக்கு உதவி செய்துள்ளார். உடனே இவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் பெங்களூருவுக்கு அழைத்துவந்து தீவிர விசாரணை மேற்ெகாண்டு வருகின்றனர்.