போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சந்தை கூடுவது வழக்கம். அதன்படி இன்று சந்தை கூடியது. இங்கு பொங்கல் பண்டிகையையொட்டி, வழக்கத்தை விட ஆடு, கோழி, மண் பானை, மாடுகளுக்கு தேவையான பொருட்கள், பூசணி, அவரை உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகளும் விற்பனையானது.
கடந்த வாரங்களில் 10 கிலோ ஆடு 4000 விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த வாரம் 10 கிலோ ஆடு ₹5 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ 250 க்கு விற்ற நாட்டு கோழி தற்போது 300க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் கால்நடைகளை அலங்கரிக்கும் அலங்கார பொருட்கள் விற்பனையும் அமோகமாக இருந்தது. இதனை விவசாயிக்ள ஆர்வத்தோடு வாங்கி சென்றனர். இதனால் இன்று கூடிய பொங்கல் சந்தையில் வியாபாரம் களைக்கட்டியது. இங்கு இன்று ரூ.4 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.