×

நீலகிரியில் பனியின் தாக்கம் அதிகரிப்பு: இந்த ஆண்டில் முதன் முறையாக ‘0’ டிகிரிக்கு சென்றது வெப்பநிலை

ஊட்டி: நீலகிரியில்  கடந்த மூன்று தினங்களாக பனி பொழிவு அதிகரித்துள்ள நிலையில் ஊட்டியில் நேற்று குறைந்தபட்சமாக ‘0’ டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது. அதிபட்ச  வெப்பநிலை நேற்று காலை 10 டிகிரி செல்சியாகவே இருந்தது.
நீலகிரியில் கடந்த அக்டோபர் மாதம் முதல் பனி பொழிவு காணப்பட்டது. கடந்த மாதம் துவக்கம் முதல் நீர் பனியின் தாக்கம் அதிகரித்தது. பனி பொழிவு அதிகரிப்பால், மாவட்டத்தில் பெரும்பாலான தேயிலை தோட்டங்களில் உள்ள செடிகள் கருக துவங்கின. தேயிலை செடிகள் முற்றிலும் கருகாமல் இருக்க தென்னை ஓலைகள் மற்றும் தாவை செடிகளை கொண்டு மூடி பாதுகாத்து வருகின்றனர். சில இடங்களில் தேயிலை செடிகளை கவாத்து  செய்யும் பணியிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், மலை காய்கறிகளை பனியில் இருந்து பாதுகாக்க காலை மற்றும் மாலை வேளைகளில் ஸ்பிரிங்லர் மூலம்  விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.  

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக ஊட்டியில்  உறைபனி விழுந்து வருகிறது. நேற்று உறைபனியின் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்டது.  ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அதிகபட்சமாக 10 டிகிரி  செல்சியசும், குறைந்தபட்சம் ‘1’ டிகிரி செல்சியசும் பதிவாகியிருந்தது. பனிப்பொழிவால், மலர் தொட்டிகளில் காலை நேரங்களில் பனி ‘கட்டி’களாக  காட்சியளித்தது. தலைகுந்தா, பைக்காரா, கிளன்மார்கன் போன்ற பகுதிகளில் வெப்பநிலை ‘0’ டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது. நேற்று காலை பனி கொட்டி கிடந்ததால், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பெரிய புல் மைதானம், காமராஜ் சாகர் அணை, பைக்காரா, சூட்டிங்மட்டம், எச்பிஎப்., ரேஸ்கோர்ஸ் மைதானம் போன்றவைகள் வெள்ளை நிற கம்பளம் போர்த்தியது போல் காட்டியளித்தது. மேலும், ஊட்டியில் உள்ள பெரும்பாலான கார்களின் மீது உறைபனி கொட்டி கிடந்தது. பனி பொழிவு அதிகரித்துள்ள  நிலையில், அதிகாலை நேரங்களில் குளிர் வாட்டுகிறது.

Tags : Nilgiris ,time ,Dew of Increasing Impact , Nilgiris, impact of snow, increase
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...