×

உபி.யில் லாரியுடன் மோதி பயங்கரம்: பேருந்து தீப்பிடித்து 10 பேர் கருகி பலி

கன்னோஜ்: உத்தர பிரதேசத்தில் தனியார் சொகுசு பேருந்தும், லாரியும்  நேருக்கு நேர் மோதியதால், பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 10 பேர் கருகி பலியாகினர். உத்தரப் பிரதேச மாநிலம். பரூக்காபாத்தில் இருந்து ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நோக்கி 45 பயணிகளுடன்  படுக்கை வசதி கொண்ட தனியார் சொகுசுப் பேருந்து நேற்று முன்தினம் சென்றது. கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள சிப்ரமாவ் அருகே சென்றபோது எதிர்பாராத  விதமாக எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது. இதில், பேருந்தும் லாரியும் தீப்பிடித்து எரிந்தன.

தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அரை மணி நேரப்  போராட்டத்துக்கு பின்னர் தீயை அணைத்தனர். இருப்பினும், பேருந்தில் பயணித்த 10 பேர் உடல் கருகி பலியாயினர். மேலும், 21 பேர் பலத்த  காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால்,  பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. மற்ற பயணிகள் விபத்து ஏற்பட்டதும் வெளியே குதித்து தப்பினர். இந்த விபத்து  குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்டுள்ள மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என  தெரிவித்துள்ளார்.

உயிர் இழந்தவர்களின்  குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி  ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பேருந்தும் லாரியும்  நேருக்கு நேர் மோதியதில், பேருந்தின்  டீசல் டேங்க் வெடித்து  தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Tags : fire ,UP , Ub., Truck, bus fire
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா