×

வீட்டுப்பாடம் எழுதாத மாணவியின் உடலில் 40 இடங்களில் குண்டூசியால் குத்திய கொடூர ஆசிரியை: பணிநீக்கம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை

ரெய்ச்சூர்: வீட்டுப்பாடம் எழுதவில்லை என்பதற்காக மாணவியின் உடலில் 40  இடங்களில் குண்டூசியால் குத்திய ஆசிரியை, பணியிலிருந்து நீக்கப்பட்டார். கர்நாடகாவின் ரெய்ச்சூர்  மாவட்டம், லிங்கசுகூரு பட்டண பஞ்சாயத்துக்கு உட்பட்ட தனியார் பள்ளி ஒன்றில்  ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் பிரசன்ன குமாரி. தமிழகத்தை சேர்ந்தவர். அவர்  7ம் வகுப்புக்கு ஆசிரியையாக நியமிக்கப்பட்டு இருந்தார். இதே  பள்ளிக்கூடத்தில் 7வது படிக்கும் மாணவி அனுஸ்ரீ. இவர் நேற்று முன்தினம்  வீட்டுப்பாடம் எழுதி வரவில்லை என்றும், கேட்ட கேள்விக்கு சரியாக பதில்  கூறவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த  பிரசன்னகுமாரி, அனுஸ்ரீயை குண்டூசியால் 40 முறை உடலில் பல இடங்களில்  குத்தியுள்ளார். வலியால் துடித்த அனுஸ்ரீ,  ஆசிரியையின் செயல்பாடு குறித்து  பெற்றோரிடம் கூறி அழுதார். அதைக்கேட்டு கொதித்து எழுந்த பெற்றோர் தங்கள்  உறவினர்களுடன் பள்ளிக்கூடத்திற்கு வந்து, பள்ளி நிர்வாகிகளுடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த லிங்கசுகூரு  பகுதி கல்வித்துறை அதிகாரி நேரில் சென்று ஆசிரியை பிரசன்ன குமாரியிடம்  விசாரணை நடத்தினார்.

அப்போது வீட்டுப்பாடம் எழுதவில்லை என்பதற்காக  மாணவியின் உடலில் பல்வேறு இடங்களில் 40 முறை குண்டூசியால் குத்தியது உறுதி  செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அதிகாரியின் சிபாரிசின் பேரில் பள்ளி நிர்வாகம் ஆசிரியை பிரசன்னகுமாரியை பணியிலிருந்து நீக்கி உத்தரவிட்டனர்.

Tags : Teacher ,places , Homework, student, layoff
× RELATED கல்லூரி மாணவர்களின் வாக்காளர்...