×

தமிழினத்திற்காக, தமிழ் மொழிக்காக திமுக என்றைக்கும் குரல் கொடுக்கும்: அந்தமானில் கலைஞர் சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழினத்திற்காக, தமிழ் மொழிக்காக என்றைக்கும் திமுக குரல் கொடுக்க காத்திருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அந்தமானில் தலைவர் கலைஞரின் சிலை திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு  கலைஞரின் சிலையை திறந்துவைத்தார். அப்போது அவர் பேசியதாவது: சட்டமன்றத்தில் 100 பேர் எம்எல்ஏக்கள் இருக்கிறோம். நாடாளுமன்றத்தில்  அந்தமானையும் சேர்த்து 40 பேர் இருக்கிறோம். நடக்க இருக்கக்கூடிய பொதுத்தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக  ஆட்சிக்கு வரவேண்டும் என்று நாங்கள்  விரும்புவதை விட நீங்கள் தான் அதிகமாக விரும்புகிறீர்கள். அந்தச் செய்தி உறுதியாக வரப்போகிறது என்பதில் எந்த மாற்றமும் இல்லை. திமுக  நாடாளுமன்ற உறுப்பினர்கள்  தமிழ்நாட்டிற்காக, தமிழ் இனத்திற்காக மட்டுமல்ல.

இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்தப் பிரச்னைகளுக்கும் குரல் எழுப்பிப் போராடுகிற சூழ்நிலையைத் தொடர்ந்து நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.  மாநிலக் கட்சி எனக் குறுக்கிவிட முடியாது. இந்தியாவில் இன்றைக்கு மூன்றாவது பெரிய கட்சியாக திமுக கிளர்ந்து எழுந்து இருக்கிறது.  உதாரணத்திற்கு மற்ற மாநிலங்களில் இன்றைக்கு ஏதேனும் பிரச்னைகள், மறியல், பேரணி, கூட்டம் என்று சொன்னால் நம்மைத் தான் முதலில்  அழைக்கிறார்கள். நீங்கள் பார்த்திருப்பீர்கள், எந்த மாநிலத்திலாவது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அமைச்சரவை பதவி ஏற்கிறது என்றால், அந்த விழாவிற்கு  தவறாமல் என்னை அழைக்கிறார்கள். அந்த விழாவிற்குச் சென்று கொண்டு இருக்கிறேன். இது எனக்குக் கிடைத்த பெருமை அல்ல. திமுகவிற்கு  கிடைத்த பெருமை. திமுக தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் பெருமை.

ஏன் தமிழர்களுக்கே கிடைத்திருக்கும் பெருமை.  மக்களவையில், மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் இணைந்து எப்படி  செயல்பட்டுக் கொண்டிருக்கிறதோ, அதை இடைவிடாமல் தொடர்ந்து செய்வோம்.  உள்ளாட்சித் தேர்தலில் இன்றைக்குப் பெரும்பான்மையான  இடங்களில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். அதேபோன்று உள்ளாட்சித் தேர்தல் உங்களுக்கும் விரைவில் வரப்போகிறது. எதிர்பார்த்துக் காத்துக்  கொண்டிருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் எப்படி ஒருங்கிணைந்து, கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து, நம் தோழர்களுக்குள் சிறு  மனக்கசப்பு இருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, கழகம் தான்- தமிழர்கள் தான்- அந்தமானில் இருக்கக்கூடிய தமிழர்களுக்கு நாம்  பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற அந்த உணர்வை வெளிப்படுத்தக்கூடிய வகையில் உங்களுடைய பணி இருந்ததோ, அதேபோல் இந்தத் தேர்தலிலும்  இருந்திட வேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

நாடாளுமன்றத்தில், நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்முடைய மொழிக்கு, இனத்திற்கு ஆபத்து வரும் போதெல்லாம் கம்பீரமாக குரல் எழுப்பி  வருகிறார்கள். பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட நேரத்தில் பார்த்தோம். தந்தை பெரியார் வாழ்க-அறிஞர் அண்ணா வாழ்க-தலைவர் கலைஞர்  வாழ்க-டாக்டர் அம்பேத்கர் வாழ்க என்ற அந்த முழக்கத்தை முழங்கி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்கள். இப்படி தமிழர்களுக்காக,  தமிழினத்திற்காக, தமிழ் மொழிக்காக என்றைக்கும் திமுக குரல் கொடுக்க காத்திருக்கிறது. ஆகவே இந்த உள்ளாட்சித் தேர்தலில் மிகப் பெரிய  வெற்றியைப் பெற்று-வெற்றி விழா நிகழ்ச்சிக்கு அழைக்காவிட்டாலும் நானே தேடி வருவேன்-அந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தித் தாருங்கள்.இவ்வாறு  அவர் பேசினார்.


Tags : opening ,speech ,The Artist ,Stalin ,Andaman , Tamil, Tamil Language, DMK, Andaman, Statue of Artist, MK Stalin
× RELATED ராஜஸ்தான் பிரசாரத்தில் வெறுப்பு...